பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைத்தல், கொடையளித்தல், விருந்தளித்தல், செந்தமிழ் நாவலர்களுக்கு வல்லாங்கு வழங்குதல், எல்லார்க்கும் உதவுதல் என்று நல்லறங்கள் பலவும் செய்தார்.

சமணத்தில் சேர்தல்

இந்தக் காலம் சமண முனிவர்கள் தமிழகத்தில் கால்கொண்டிருந்த காலம். பாடலிபுத்திரத்தில் சமணப் பள்ளிகள் தோன்றின. தமிழ் நாட்டுமக்கள், சமண முனிவர்களின் வாதத் திறமையால் ஈர்க்கப் பெற்றனர். கொல்லாமையாகிய அருள்நலஞ் சார்ந்த ஒழுக்க நெறியைப் பரப்பியதனாலும் தமிழகத்தில் சமண சமயம் பரவும் நிலை உருவாகியது.

மருணீக்கியாருக்குத் தமது குடும்பத்தில் தொடர்ந்து நடந்த உயிரிழப்புகளாலும் இன்னபிற சூழ்நிலைகளாலும் நிலையாமை உணர்வில் தலைப்பட்டுத் துறவு நெறியை விரும்பினார். சமணர்களின் அறிவுரைகள் மருணீக்கியாருக்கு இதமாக அமைந்தன; சமணத்தில் சேர்ந்தார். மருணீக்கியார் அல்லலுற்ற நிலையில் அறிவுரை - அறவுரை கூறித் தேற்றி, சைவ நெறியே சாலச்சிறந்தது என்று அவருக்கு உணர்த்துவார், அன்றும் இல்லை போலும்!

மருணீக்கியார் சமணத்தில் சேர்ந்து அருங்கலை நூலான எல்லாம் கற்றுத் தெளிந்து சமணர்களால் “தரும சேனர்” என்று பாராட்டப் பெற்றார்; சமணசமயத் தலைவரானார். ஆயினும் காலப்போக்கில் சமணசமய நெறி முறைகள் இயற்கைக்கு இசைந்தில்லாமையை உணர்ந்தார். வாழ்வைத் துறந்த ஒரு வாழ்வை, மருணீக்கியார் எண்ணிப் பார்க்கிறார்.

உடலினை வருத்தச் செய்யும் நோன்புகள் பற்றிய சிந்தனை அவருக்குத் தலைப்பட்டது என்பதனை அவர் பாடிய இசைப் பாடல்களாலும் “விரதமெலாம் மாண்ட