பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இறைவா! நினைக்கும் புலன் பெற்றுள்ள மனிதப் பிறவியில், ஊனில் உயிருள்ளவரை உன்னை நினைப்பேன். நினைத்துக்கொண்டே இருப்பேன். மறவாமை ஊடாடாத நினைவில் நிலைத்திருந்து ஆவியை உன் நினைப்புடனேயே கழிப்பேன். உடலிலிருந்து உயிர் பிரிந்து போன பிறகு நான் என் செய்வேன்?

நினைக்குமாறுடைய பிறவி கிடைத்தால் பிழை வராது. நினைத்தற்குரிய மனம், நெஞ்சு, புலன் பெறாத இழி பிறவியைத் தந்தால் என் செய்வது? இறைவா, அப்போது நீ என்னை மறக்காது இருந்தருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். கல் நெஞ்சையும் உருகச் செய்யும் பாட்டு இது.

நீதி உணர்வு

அப்பரடிகள் சமுதாயச் சிந்தனையாளர். ஆதலால் நீதி பற்றிய சிந்தனையில் சிறந்து விளங்கினார். நீதி என்பது என்ன? ஆன்மாவின் நல்ல குணம் நீதி. நீதி மனித குலத்தில் நட்பை வளர்க்கும்; பெற்ற நட்பை உறுதிப்படுத்தும்; ஒருவருக்கொருவர் நீதி நெறிமுறையில் நடந்து கொள்வார்கள்; பழகுவார்கள். அவர்கள் பிரிவதில்லை. இது வரலாற்றுண்மை.

நீதிக்கு முரணான ஆசைகள், செயல்முறைகள் தோன்றும்பொழுதுதான் மக்கள் முரண்படுகிறார்கள், மாறுபடுகிறார்கள், போரிடுகிறார்கள்; சாகிறார்கள். ஆதலால் நீதி சார்ந்த வாழ்க்கையே உயர்ந்தது, வாழ்வதற்குரியது.

மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்குதல். எல்லா உயிர்களும் வாழ்தல் ஆகியன நீதி சார்ந்த சமுதாய அமைப்பு. தமிழ் மக்களிடத்தில் நீதி சார்ந்த வாழ்க்கை முறைச் சிந்தனை, நீதி சார்ந்த வாழ்க்கை கால்கொண்டு விளங்கியது.