பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

111


சூலை தரப்பெற்றது. மருணீக்கியார் குடலைச் சூலைநோய் வருத்த வருந்தினார்.

சமணர்கள், மந்திரங்களால் அந்தச் சூலை நோயை அகற்ற எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. சமணர்கள் கைவிட்டுவிட்டனர்; துன்புற்ற அவர் திலகவதியை அடைந்து தமக்கையாரை - தாயன்பில் விஞ்சிய தமக்கையாரை, தவக்கொழுந்தை, திலகவதியாரை அடைந்து நிலமிசை வீழ்ந்து வணங்கினார்.

திலகவதியார் தம் இரு கைகளாலும் மருள்நீக்கியாரை எடுத்தாள்கின்றார். சைவநெறி தழுவவும் திருவதிகைத் திருக்கோயிலில் சென்று வழிபடவும் உரிமையளிக்கும் வகையில் திலகவதியாரே “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்து, உய்யுமாறு செய்தருளினார்.

சைவநெறியில் தீக்கை செய்தல், அன்று, எவ்வளவு எளிய முறையாக இருந்திருக்கிறது!

இன்று தீக்கை முறையில் குண்டங்கள் வேள்விகள் முதலியவை இடம்பெறுகின்றன. அதனால் பெருஞ்செலவு ஏற்படுகிறது. அதுமட்டுமா! சைவநெறியில் பெண்களும் தீக்கை செய்வித்தருளும் ஞானாசிரியராக அமையலாம் என்பதற்கும் திலகவதியார் மருணிக்கியாருக்கு ஞானாசிரியராக அமைந்தது ஓர் எடுத்துக்காட்டு! மருணீக்கியார் உடனே திருவதிகை வீரட்டானத்து ஈசனை வணங்கி ஊனும் உள்ளமும் பொங்கிப் பெருக திருப்பதிகம் அருளிச் செய்கின்றார்.

கூற்றாயின வாறு விலக்க கிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக் கேஇர வும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட