பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர்

127



இந்தப் பாடல் மூலம் அப்பரடிகளுக்குத் தீண்டாமை ஒழிப்பில் இருந்த உறுதிப்பாடு புலனாகிறது. மானுடம் சமத்துவம் பெற ஒரே ஒரு தகுதி மெய்ந்நெறி நின்று ஒழுகுதல்தான்; மற்றபடி குலமன்று, கோத்திரமன்று; வேறு, எதுவுமன்று. இது நமது சமய நெறியின் தொன்மையான விழுமிய கொள்கை. இடையில் வந்த தீமையே சாதி முதலியன.

“எவனேனும் அவன் சண்டாளனாய் இருப்பினும் “சிவ” என்று சொல்வானானால் அவனோடு பேசுக; அவனோடு உறவு கொள்க; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க” என்பது முண்டக உபநிடத வாக்கு. பிரம்ம சூத்திரம் இதையே வழிமொழிவதாக நீலகண்டபாடியம் எடுத்து வழி மொழிந்துளது.

ஆயினும், இந்த மெய்ம்மை வாக்கு - உண்மை - இன்றுள்ள முண்டக உபநிடதத்தில் இல்லை. சாதிப் பித்தர்கள் அதனை மறைத்து விட்டனர். ஆயினும் நமது நல்லூழால் இந்த உண்மைப் பொருள், மெய்ம்மை நெறி நமக்குக் கிடைத்துவிட்டது.

இதனைத் தேடி வழங்கிய பெருமை மாதவச் சிவஞான முனிவருக்கு உரியது. மாதவச் சிவஞான முனிவர், தாம் இயற்றியருளிய கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதியில்,

சிவன்எனும் மொழியைக் கொடிய சண்டாளன்
செப்பிடின் அவனுடன் உறைக;
அவனோடு கலந்து பேசுக; அவனொடு
அருகிருந் துண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே
றெனக்கிலை கலைசையாண் டகையே!