பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எடுத்து கூறுகிறார். பாவமும் பழியும் அற்று வாழ்தல் வேண்டும்.

கங்கையாடுவதும் காவிரியாடுவதும் பாவநீக்கத்திற்குத் துணை செய்யுமா? சாத்திரங்கள் பல கற்றும் என்ன பயன்? காலையில் நித்தம் நீரில் மூழ்கி என்ன பயன்? காடுகளிலும் நாடுகளிலும் திரிவதால் என்ன பயன்? ஊன் வருந்த நோன்பிருந்து என்ன பயன்? இவையெல்லாம் பாவம் நீக்கா.

அரனுக்கு அன்பில்லாமல் ஆயிரம் ஆயிரம் நற்பணிகள் செய்யலாம். ஓடும் இயல்புடைய தண்ணீரை ஓட்டைக் குடத்தில் தொகுத்து வைத்து மூடினால் நிற்குமா? அதுபோலத்தான் அரனுக்கு அன்பில்லாது செய்த பணிகள்! அரனுக்கு அன்பின்றிச் செய்யும் அறம் அறமல்ல.

ஈசனுக்கு அன்புடையோரே பாவம் பழியிலிருந்து விடுதலை பெற முடியும்! இறைவன் சிவன்! அவனை நினைந்து ஏத்தி மகிழின் பயனுண்டு. ஈசன் திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொண்டால் அவன் காப்பான்! அவன் காவலாளன்!

சிவன் - ஈசன் ஊனிலும் உயிரிலும் உணர்விலும் கலந்து நின்று அருள் செய்வான்; கலந்து நின்று காத்தல் செய்வான். ஆதலால், எங்கும் ஈசன் உளன் என்று எண்ணி, ஈசன் திறமே பேணின் பாவங்கள் நீங்கும்; பழி அகலும்.

அரனுக்கு அன்பு பூணுதல், அரன் உணர்த்தும் வழியில் திருத்தொண்டு செய்தல் பாவநீக்கத்திற்குரிய வழி. மற்றபடி கழுவாய் முதலியன பயன் தரா. பாவம், பழி முதலியவற்றைக் கழுவாய்முறை நீக்காது.

ஆதலால், பாவம் செய்யற்க! ஓடித் திரியும் மனத்தை மடைமாற்றம் செய்க! ஒரோவழி பாவம் நிகழ்ந்துவிட்டால் இறைவனை நினைந்து நினைந்து உருகுக! இதுவே பாவ மன்னிப்புப் பெறும் முறை.