பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

199


8. பாழுரில் பிச்சை

பிச்சையெடுத்து வாழ்வது வையகத்தின் இயற்கையன்று. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்” என்ற திருக்குறளில் திருவள்ளுவர் “இரந்தும்” என உம்மை கொடுத்து அழுத்தியதே இரந்து வாழும் வாழ்க்கை, நெறி பிறழ்ந்தது - நியதி கடந்தது என்பதை அறிவுறுத்தவேயாம். ஒரோவழி, இயற்கைச் சூழலால் எளியராகிய வழி, இரந்தும் வாழவேண்டிய இன்னாத சூழல் ஏற்பட்டுவிடின், அந்த இன்னாமையை ஓரளவாவது இனியதாக்கிக் கொள்ள வேண்டாமா? அது மட்டுமின்றி நெறி கடந்த இரப்பினை, நெறியுடையதாக்கிக் கொள்ள வேண்டாமா? அதனால் இரப்பினையும் நெறியாக்கிக் கொள்கிற இனிய வழி வகையைக் கண்டு காட்டியது வள்ளுவம். இதனை,

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று,

என்ற திருக்குறளால் அறியலாம். அதாவது இரப்போர்க்கு கரவாது உவந்து ஈவார்கண்ணே இரத்தல் குற்றமன்று. அவரிடத்து இரத்தலும் ஈதலே போலும் என்றும் வள்ளுவம் கூறுகிறது. அஃதெங்ஙனம் இரத்தல், நெறியாக முடியும்? ஈதலாக முடியும்? இரப்பார்க்கு உவந்து ஈயாது கரப்பார் மாட்டு இரத்தல் மூலம் இரப்பவர்க்கு இழிவு வருகிறது; ஏமாற்றம் ஏற்படுகிறது; வறுமையும் அழிந்த பாடில்லை. அதே போழ்து தன்னை நோக்கி இரந்தவர்க்கு ஈயாது கரந்தவனுக்கும் இழிவு வருகிறது; இரந்தும் இல்லையென்று கூறியதால் பாவம் ஏற்படுகிறது. கரவாது உவந்து ஈவார்கண் இரந்து கேட்பதன் மூலம், இழிவு தோன்றுவதில்லை, பயனும் கிடைக்கிறது; வறுமையும் நீங்குகிறது. அதோடு ஈவான் உவந்து ஈதலின் மூலம் அவனுக்கு மகிழ்வு கிடைக்கிறது; ஈத்துவக்கும் இன்பம் கிடைக்கிறது; ஈவானுக்கு இரப்பானின்