பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


9. எண்சாண் உடம்பில் இருக்கும் வாணிகர்!

இந்த உடம்பு எண்சாண் அளவினது; உயிர் உறைதற் கேற்ற இனிய குடியிருப்பு. உயிர் உடலில் குடியிருந்தாலும் வாடகைக் குடியிருப்பேயாம்; முற்றிலும் உரிமையுடைய தன்று. ஐம்பொறிகளும், உடலுக்கு நாயகராக விளங்கி உடலுக்குத் துன்பமே செய்கின்றன. நீதி நெறிக்கு மாறுபட்ட வாழ்க்கை முறைகளிலேயே பொறிகள் ஈடுபடுத்துகின்றன. இந்த ஐம்பொறிகளும் வணிகரைப் போல் வாணிகம் செய்கின்றன. அதிலும் நெறிவழிப்பட்ட வாணிகமன்று; தம் சுவை ஒன்றையே முன்னிலைப்படுத்தி முனைகின்றன; தாம் துய்த்தலிலேயே வேணவாக் காட்டுகின்றன. இந்தத் துய்ப்பின்மூலம், யாதொரு பயனும் உடலுக்கும் இல்லை; உயிருக்கும் இல்லை. முறைகேடான பொறிகளின் துய்ப்பாதலினால் உடல் நோய் வாய்ப்படவே செய்கின்றது. எளிதில் மூப்பும் முதுமையும் வந்தடைகின்றன. திறன் மிக்க அறிவும், ஆற்றல் நிறை உழைப்பும் மக்கி மறைந்து போகின்றன. வாழ்க்கையில் ஈடு இணையற்ற பேறாகிய புகழை இழப்பதோடன்றி இகழ்ச்சியும் வந்தடைகிறது. தம்மைக் கொண்டவர்க்கு, இல்லாத தீங்குகளைச் செய்து, தாம் சிறுபொழுது மகிழும் ஐம்பொறிகளின் வாணிகம், வாணிகமா? இல்லை, இல்லை, கொள்ளை! ஆனாலும் அப்பரடிகள் வாணிகமாகவே உருவகம் செய்கிறார். இந்த நீதியோடு படாத வாணிகத்தை ஐவர் செய்யத் துணை நிற்கின்றனர். ஏனைய உள்பொருள்களாகிய தத்துவங்கள் தொண்ணுற்றாறு. இந்த தொண்ணுற்றாறு தத்துவங்களும் தெளிந்த வாழ்க்கை வழங்குவதற்குப் பதில் மயங்குகின்றன.

இந்த மயக்கத்தின் காரணமாக உய்திக்குத் துணைசெய்யத் தவறிய இந்த உடம்பில் உயிர் தானே குடியிருப்ப