பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

207


                 உள்கினேன் நானும் காண்பான்
                                உருகினேன் ஊறி ஊறி

என்று அடிகள் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். ஆயினும், “நின்னை அரியனாகக் கருதாது, எளியனாகக் கருதிப் போற்றுதல் ஒழிந்தேன்” என்றும் அடிகள் இரங்கிக் கூறுகின்றார். இங்ஙனம், இறைவனை எளியனாகக் கருதி இழந்துபடுதல் படிமுறையில் ஞான நெறிக்கு உயர்ந்தவர்களுக்கும் கூட நேரிடுகிறது என்றால், சாதாரண மனிதர்களின் நிலைமை என்ன ஆவது? இங்ஙனம் அல்லற்படுவோர் வாழ்க்கையை இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பின் உள்ளத்திற்கு உவமிக்கின்றார் அடிகள் பெருமான். உள்ளம் எறும்பென்று உவமிக்கப்படுகிறது. ஆம்! உள்ளம் எறும்பு போலச் சுறுசுறுப்பானதுதான். ஆனால், எறும்பின் சுறுசுறுப்பெல்லாம் வயிற்றுக்கு இரை தேடுவதிலே யாம். அதற்கு வேறு அலுவல் இல்லை. வயிற்றுக்கே இரை தேடி அலையும் எறும்பு இருதலைக் கொள்ளி மேலதானால் உணவு வேட்கையால் ஒட முனைகிறது. ஆனால் இரு முனைகளிலும் பற்றியெரியும் கொள்ளியோ அச்சுறுத்துகிறது. இங்ஙனம் உலகியல் வேட்கை பற்றி யெரியும் உள்ளத்தராக இருப்பவர்களால் இறைவனைக் காண முடியாது; அவனைக் கூட முடியாது என்பது அப்பர் அடிகள் கருத்து.

ஆதலால் தந்தம் ஈசன் எம்பெருமானை உள்ளத்தால் உள்கி, ஆற்றல் மிக்க அன்பால் நினைத்து அவனையே உணர்வாக்கி உருகி, கண்டு இன்புற முயல்வதே சமய வாழ்க்கை.

உள்ளுவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை
உள்கினேன் நானுங்காண்பான் உருகினேன் ஊறிஊறி
எள்கினேன் எந்தைபெம்மான் இருதலை மின்னுகின்ற
கொள்ளிமேல் எறும்பெனுள்ளம் எங்ஙனம் கூடுமாறே!

என்பது அப்பர் திருப்பாட்டு.