பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பேசும். அந்த ஒன்றில் வேறுபாட்டுணர்வு அற்று, ஒன்றிக் கலந்தால் துன்பம் வாராது என்ற கருத்தை அப்பரடிகள் இனிது விளக்கிப் பாடுகின்றார். அதாவது, தனிமை துன்பம் தரும். பொதுமை இன்பம் தரும். கடவுள் ஒன்று. அதுவே உலகத்திற்கு ஒன்று. அந்த ஒன்றை ஒன்றியிருந்து நினைத்தால் இன்புறலாம் என்பதாகும்.

மன்றத்துப் புன்னைபோல மரம்படு துயரமெய்தி
ஒன்றினா லுணரமாட்டே னுன்னையும் வைக்கமாட்டேன்
கன்றிய காலன்வந்து கருக்குழி விழுப்பதற்கே
அன்றினா னலமந்திட்டே னதிகைவீ ரட்டனீரே.

என்பது அப்பர் திருப்பாட்டு.

அப்பரடிகள் உருவகத்தில் செய்திகள் அமைத்து விளக்குவதில் ஈடு இணையற்றவர். அப்பரடிகள், வாழ்க்கையில் அறிவுவினுள் தெளிவும், தெளிவினுள் சிவமும் காண வேண்டுமென்ற கொள்கையினர். வாழ்க்கையில் அறிவு தலைப்படுவதே அருமையிலும் அருமை. அறிவில் தெளிவு காண்பது எளிதன்று. அறிவில் தெளிவின்மையினாலேயே சமயக் கணக்கர் முரண்படுகின்றனர்; மோதுகின்றனர். சமயச் சண்டைகள் கால்கொள்கின்றன. அறிவில் தெளிவு காண்புழி - இன்ப அன்பு முகிழ்க்கும். அதுவே சிவநிலை.

இந்த நிலையை எய்திட வேண்டிய ஆருயிர் மயக்க வலையிற் சிக்கித் தவிப்பதை அப்பரடிகள் நகைச்சுவை ததும்ப உருவகிக்கின்றார். எரிகின்ற அடுப்பு. அதில் உலைப்பானை உலைப்பானை நீரில் மெள்ளச் சூடேறுகிறது. அந்நிலையில் குளிர் நீரில் கிடந்து மரத்துப்போன ஆமை உலைப்பானையில் இடப்பெறுகிறது. ஆமைக்கு இளம்சூடு உணக்கையாக இருக்கிறது; மகிழ்கிறது. அந்த மகிழ்ச்சியில் அந்தப்பானை நீர்க்குள்ளேயே திளைத்து நின்று விளையாடுகிறது. என்னே அறியாமை எரிகின்ற அடுப்பிலிருக்கும் உலைநீர் எப்பொழுதும் இளவெந்நீராக இருக்காது. வெந்நீரின் வெப்பநிலை ஏறும். ஆமை, வெப்பநிலை மாற்றத்-