பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளியல் விளக்கும் காட்சி!

27


படுவதில்லை; வண்ணமில்லையல்லவா? வண்ணமில்லாத வடிவமும் வடிவமோ? பயன் தருமோ? பயணமே பயன்படுதல் நோக்கமுடையது. கருங்கடலினின்று தண்ணீர் ஆவியாக மாறிப் பயணம் செய்கிறது. பயணத்தால் அந்நீரும் தூய்மை பெறுகிறது. நிலவுலகத்தையும் தூய்மை செய்கிறது. வானின்று மண்ணுக்குப் பயணம் செய்கிறான் இறைவன். ஏன்? மனிதர்களை ஆட்கொண்டு அருளுதற் காகவே! மனிதனின் வாழ்க்கைப் பயணம் என்ன ஆகிறது? அவன் பயணத்தின் பயன் கருதுவதில்லை; பயன் தரத்தக்க பணிகளை மேற்கொள்ளுவதில்லை. அவனுடைய வாழ்க்கைப் பயணம் ஆகிவிடுகிறது. மனித வாழ்க்கையின் பயன் கடவுள் நலம் அறிய பயணம் பெறுதலேயாகும். இந்த ஒப்பற்ற கடவுள் நலம் - இன்ப அன்பு நலம் எளிதில் கிடைக்குமா? பூசனையால் மட்டும் பெற முடியுமா? தன்னல மறுப்பால் பெறலாம்; பிறர் நலம் பேணும் பெருந்தவத்தால் பெறலாம். இதுவே கடவுளியலின் உயிர் நாடி. இந்தச் சமய உயிரியலின் தன்மை இன்றைய சமய வாழ்க்கையில் இல்லை. அதனாலேயே சமய நெறிகளைப் பற்றிச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பதவிக்குப் பலர் போட்டி போடுவர்; ஆனால், பதவிக்குரிய தகுதி பேணார்; தக்க பணிகளைச் செய்யார். இது மனித உலகத்தின் இயல்பு மட்டுமல்ல; அமரர் உலகமும் அப்படியே! தக்கன் வேள்வியில் அமரர்கள் தலைமை வேண்டிப் பெற்றனர். ஆனால், அலை கடலில் ஆலகால் நஞ்சு எழுந்தபொழுது அலறி ஓடினர். எந்தை ஈசன் உண்ணற்கரிய அந்த நஞ்சை உண்டான்; அமரர்களைக் காப்பாற்றினான். நஞ்சினைத் தொடர்ந்து அமுதம் வந்தது. அமரர்கள் நாவில் எச்சில் ஊறியது. நஞ்சைக் கண்டு நடுங்கி ஓடிய அமரர்கள் அமுதுண்ண நாவாசை காட்டினர். இறைவன், அமுதுண்ண விரும்பாது அமரர்களுக்கு அதனை வழங்கினான். அமரர்களைப் போகத்தில் ஆழ்த்தினான்; வாழ்வித்தான். இஃதொரு புராண வரலாறு. ஆனாலும்