பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

பாரதி ஒரு யுகசந்தி


தமிழ், ஒரு வளர்ந்த மொழி. தமிழ், கவிதை மொழி. தமிழ் இலக்கியச் செல்வம், கவிதையிலேயே செழித்து வளர்ந்ததாகும். காலத்துக்குக் காலம் நாட்டு மக்களின் தேவையறிந்து இலக்கியங்கள் செய்து தந்த பெருமை தமிழ்க் கவிஞர்களுக்கு உண்டு.

தமிழகத்துக் கவிஞர்களில் பலர், மக்களைச் சார்ந்தே நின்றவர்கள்; அதாவது மக்களுக்காகப் பாடியவர்கள். மக்களுக்காகப் பாடிய கவிஞர்கள் வரிசையில் பாரதி, தலை சிறந்து விளங்குகின்றான். பாரதி பிறவிக் கவிஞன். பாரதிக்குக் கவிதைதான் தொழில். பாரதியின் படைக்கலம் கவிதையே தான். பாரதி, அடிமை நாட்டில் பிறந்து, அடிமையாக வாழ்ந்து, அடிமையாகவே செத்தவன். ஆனால், பாரதியின் ஆன்மா சுதந்திரம் பெற்று விட்டது. அவன் ஆசைப் பட்டதைப் போல அவன் சுதந்திரமான சிட்டுக்குருவி போலத்தான் வாழ்ந்தான்; பாடினான்.

நாடு அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கு முன்பே பாரதி, இந்த நாட்டுத் திருக்கோயில்களுக்குள் இருக்கும் உமையம்மை திருமேனிகளுக்கெல்லாம் "சுதந்திர தேவி" யென்று பெயர் சூட்டினான். பாரதி, சுதந்திர தேவியின்