பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியீட்டுரை

துரைமா. பூங்குன்றன் அறி.இ. கமு, மெய்மு,

நம் பாவலரேறு ஐயா அவர்கள், இயற்கையின் இயக்கங்கள், அமைப்புகள், போக்குகள் அனைத்தையும் மெய்ப்பொருளறிவோடு பொருத்தி இவை ஒரு நெறியோடுதான் இயங்கவல்லன எனக் கூர்ந்தாயும் பழக்கம் உள்ளவர்கள். அனைத்து வாழ்வியல், அறிவியல் அறிவும் உள்ளடக்கியதுதான் மெய்ப்பொருளறிவு என முறைப்படுத்திக் கொண்டவர்கள்.

எனவே, திருக்குறளின் கருத்துகள் மெய்யறிவுப் பார்வையில் பார்க்கத் தக்கன எனப் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அப்பார்வையில் மிகவும் புதுமையான பொருள்களை, ஆங்காங்குத் திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துவார்கள். அரசியல் நெருக்கடிக் காலமான 1975-76ஆம் ஆண்டுகளில் அற்றை அரசு இவ்வுலக நடைமுறை வாழ்வினின்று பிரித்து ஓராண்டுக் காலம் ஐயா அவர்களைக் கொடுஞ்சிறையில் வைத்திருந்த காலத்தில்தான் திருக்குறளை மெய்ப்பொருள் நோக்கில் நோக்கி, அதைச் சார்ந்தே உரையெழுத அவர்களுக்கு எண்ணம் எழுந்தது. எனினும் திருக்குறளுக்குத் தாம் உரை எழுத விழைந்த நோக்கத்தை ஐயா அவர்களே தம் பொது முன்னுரையில் விளக்கியெழுதியுள்ளார்கள். அப் பொது முன்னுரை ஒவ்வொரு பகுதியிலும் இடம் பெறவில்லை யென்ற கரணியத்தால் அப்பகுதியை மட்டும் உடனடிப்பார்வைக்கு இங்கு அளிக்கிறோம். இதை முழுமையாகப் பொதுமுன்னுரை தொகுதியில் காணலாம்.