பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

109



'ஒப்புரவு ஒழுகு’ - ஆத்திச்சூடி: 10

‘யார்கண்ணும் ஒப்புரவி னால்அறிக சான்றாண்மை' - நான்மணி:77:3

'ஒப்புரவு ஆற்ற அறிதல்’ - ஆசாரக்: 1:3

‘ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை’ - முதுமொழிக்: 53

‘ஈட்டிய ஒண்பொருள் இல்லெனினும் ஒப்புரவு
ஆற்றும் குடிப்பிறந்த சான்றவன்’ - பழமொழி : 217:1-2

'தாமே ஒப்புரவு அறியின்’ - நற் : 220 : 8

இவை அக்காலத்துக் கால்கொண்ட பொதுநிலைச் சிந்தனைகள். இவற்றின்வழி, பொருள்வழி ஒப்புரவே அவர்கள் முதலிற் கண்டது என்று நாம் துணிந்து கூறலாம்.

இவ்வுணர்வைப் பரிமேலழகர்,

‘ஒப்புரவறிதல்' - அஃதாவது, உலக நடையினை அறிந்து செய்தல். உலகநடை வேதநடைபோல அறநூல்களுள் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யும் தன்மைத்தாகலின், 'ஒப்புரவறிதல்' என்றார். மேல் மன, மொழி, மெய்களால் தவிரத்தகுவன கூறினார். இனிச் செய்யத் தகுவனவற்றுள், எஞ்சி நின்றன கூறுகின்றாராகலின், 'தீவினையச்சத்தின் பின் வைக்கப் பட்டது' என்று தம் முன்னுரையில், வேதநடையில் இவ்வுணர்வு கூறப்பெற்றுள்ளது போல், வேதப்படுத்தியும், அது விளங்காததாகலின், 'தாமே அறிந்து செய்யும் தன்மைத்தாகலின்' என்று கொச்சைப் படுத்தியும் கூறியதுடன் நில்லாது.

- அடுத்துவரும் 'ஈகை' அதிகாரத்து முன்னுரையில்,

‘அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கும் ஆற்றாது கொடுத்தல்'. இது (ஈகை) மறுமை நோக்கியது ஆகலின், 'இம்மை நோக்கிய 'ஒப்புரவறித'லின் பின் வைக்கப்பட்டது' என்றும் கூறி, இவ் வொப்புரவறிதல் உணர்வை ஆரியப் படுத்திக் கூறுவார். இஃது அவரின் வேதவியற் புரட்டுகளில் ஒன்று என்க.

இவ்வுரைக்கு விளக்கவுரை கூறிய, ஆரிய அடிவழிப் புத்துரைகாரர் கோ. வடிவேலு (1904) அவர்கள்,

'ஒப்புரவறிதற்குப் பயன் இம்மையிற் புகழ், இஃது 'ஈகை' அதிகாரத்தின் அவதாரிகையில் 'இம்மை நோக்கிய 'ஒப்புரவறித'லின் பின் வைக்கப் பட்டது' என்றும், இவ்வதிகாரத்தின் பத்தாம் செய்யுளின் விசேடவுரையில், 'புகழ் பயத்தல் நோக்கி' என்றும், கூறியிருத்தலினாலும் விளங்கும்' என்று விதந்து கூறினார்.