பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி

இந்தப் புத்தகத்திலடங்கிய சிறுகதைகளை ஏற்கெனவே அவை பத்திரிகையில் வெளியான காலத்தில் அவ்வப்போது நான் படித்திருக்கிறேன்.

முன்னுரை எழுதும் அவசியத்தை முன்னிட்டு இப்போது இன்னும் பல தடவை படிக்கலாமென்று எண்ணினேன். ஆனால், அதற்கு யோசனைகளும் புனராலோசனைகளும் செய்து பெரிதும் தயங்கினேன்.

‘விந்தன்’ கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்!

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு ஜாதியரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாயிருந்தபடியால் அந்தச் சாதியாரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது.

மற்ற சாதிக்காரர்களில் அதிகமானபோது பிராமணக் கதை, பிராமணத் தமிழ் ஆகியவற்றைக் குறித்து வாசகர்களிடையே புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், மற்ற சாதியாரைப் பற்றிய கதைகள் பல வரத் தொடங்கின. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியாரைப் பற்றிக் கதைகள் எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை உடை பாவனைகள் அவ்வளவு சரியாயிருப்பதில்லை. மிகச்சிரமம் எடுத்துக் கவனித்து எழுதினாலும் சில சமயம் ‘ராபணா’ என்று குட்டை உடைக்கும்படியான தவறுகள் நேர்ந்துவிடும்.

இன்னொரு அபாயமும் அதில் ஏற்படுவதாயிற்று.

கதை என்றால், அதில் நல்ல பாத்திரங்களும் வருவார்கள், துஷ்ட பாத்திரங்களும் வருவார்கள்.