பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

45


“மற்றொரு விஷயம். நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள் அல்லவா?” என்று கேட்டார் ஆசிரியர். “போவது உண்டு" என்றார் ஜயசிங். "அங்குள்ள மூர்த்திகளை, கோபுரங்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்தது உண்டா? அந்தச் சிற்பங்களில் பெண்மையைக் காட்டுகின்ற அங்கங்கள் பெரியனவாக இருந்தாலும் யாரும் விகார உணர்ச்சி கொள்வதில்லை. படுத்திருக்கும் தாயின் மார்பில் குதித்து விளையாடுகிற குழந்தைக்குத் தவறான உணர்ச்சி உண்டாவதில்லை. இது இன்று நேற்று வந்தது அல்ல. நீங்கள் சொல்லுகிறபடி திருப்புகழையும், காவடிச் சிந்தையும் அதில் வரும் பெண்களின் வருணனைக்காக நீக்கத் தொடங்கினால் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் கடலில் கொண்டுபோய்ப் போட வேண்டும். கோவில்களில் உள்ள விக்கிரகங்களை உடைத்தெறிய வேண்டும்."

"ஐயா, ஐயா! அப்படிச் சொல்லக் கூடாது, இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் ஏமாந்து போனேன். நல்ல சமயத்தில் இந்த உண்மையைச் சொன்னீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி" என்றார் ஜயசிங். அதன் பின்பு அந்தப் போலீஸ் அதிகாரிக்கு இருந்த தவறான எண்ணம் போய்விட்டது.


தியாகராச லீலை

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும். தியாகராசப்பெருமானின் திருவிளையாடல் 360 என்று சொல்லுவார்கள். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எண்ணினார். ஆனால் மூல நூலின் ஒரு பகுதியே கிடைத்தது. கிடைத்த 14 லீலைகளை மொழிபெயர்த்துத் தமிழ்ச் செய்யுளாக இயற்றினார். அந்த நூலை அச்சிட வேண்டு மென்று எண்ணி ஆராய்ந்து இவர் 1905-ஆம் ஆண்டு அதைப் பதிப்பித்தார்.


மகாமகோபாத்தியாயப் பட்டம்

1906-ஆம் ஆண்டு முதல் தேதி பிறந்தது. அரசினர் இந்த நாட்டில் சிறப்பான பணி புரிபவர்களுக்குப் பல பட்டங்களை வழங்கி ஊக்கம் அளித்துவந்தனர். கங்காதர சாஸ்திரிகள் என்பவர் அன்று காலையில் ஆசிரியரைப் பார்க்க வந்தார். "எங்களுக்கெல்லாம் அளவில்லாத மகிழ்ச்சி. நாங்கள் எல்லோரும் ஆனந்தத்தால் குதிக்கிறோம்." என்றார். ஆசிரியப் பெருமானுக்கு ஒன்றும் விளங்கவில்லை. "உங்களுக்கு மகா