பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

47

மூன்று பாடல்களையும் ஒரு பென்சிலினால் எழுதினார்; அந்தத்தாளை நான் பார்த்திருக்கிறேன், அந்தப் பாடல்கள் வருமாறு:


1. செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்
பேருவகை படைக்கின் றீரே?


2. அன்னியர்கள் தமிழ்ச்செவ்வி அறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவின் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?


3. நிதியறியோம், இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்றுமனம் வருந்தற்க,
குடந்தைநகர்க் கலைஞர் கோவே,
பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.



வீட்டை விலைக்கு வாங்கியது

ஆசிரியருடன் கல்லூரியில் பழகி வந்த பேராசிரியர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். தாம் தமிழில் மாணவர்களுக்காக ஒரு புத்தகம் எழுதி இருப்பதாகவும் அதைப் பார்த்து ஆசிரியப் பெருமான் திருத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். தமக்கு நேரம் இல்லாமையினால் தம் குமாரரைப் பார்த்துத் திருத்திக் கொடுக்கும்படியாகச் சொன்னார் ஆசிரியர். அது சம்பந்தமாக ஆசிரியர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்தார். ஒரு முறை ஆசிரியப் பெருமானிடம் அந்த வீட்டிற்கு வாடகை என்ன என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். பின்னர் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் போய்ப் பார்த்து, "அந்த வீட்டை ஏன் அவ்வளவு