பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


உரைநடை

வர் பதிப்பித்த நூல் ஒவ்வொன்றிலும் விரிவான முகவுரை இருக்கும். அதில் நூலைப் பற்றிய குறிப்புக்களும் அதன் சிறப்பான இயல்பும் அதன் மூலப் பிரதிகள் கிடைத்த இடங்களும் பதிப்புக்கு உதவி செய்தவர்களின் பெயர்களும் இருக்கும். நூற்பிரதி கிடைக்க உதவி செய்தவர்களின் பெயர்களையும் நன்றியறிவோடு குறிப்பிட்டிருப்பார். ஐயரிடம் கண்ட பண்புகளில் மிகவும் முக்கியமானது நன்றியறிவு. தம்மிடம் பாடம் கேட்ட மாணாக்கர்கள் செய்த உதவியைக்கூட மறவாமல் குறிப்பிடுவார். நம்மிடம் பயின்றவர்தாமே? என்று புறக்கணிக்கமாட்டார்.

மூல நூல் பிரதிகள் எங்கே எங்கே கிடைத்தன என்ற விவரத்தையும் அந்த முகவுரையால் அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து, எவ்வளவு இடங்களுக்குச் சென்று சுவடிகளைத் தேடி அலைந்திருப்பார் என்று தெரிந்துகொள்ளலாம். சுவடிகளைத் தேடி ஏமாந்த இடங்களும் பல உண்டு. கொங்கு நாட்டில் ஒரு புலவர் வீட்டில் வளையாபதி இருக்கிறது என்று ஒரு பொறுப்புள்ள கனவான் சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது ஐயருக்கு. உடனே அவ்வூரை நோக்கிப் புறப்பட்டார். நானும் அப்போது உடன் சென்றேன்.

அந்தப் புலவர் காலமாகிவிட்டார். அவருடைய குமாரன் இருந்தான். ஐயர் தக்க பெரிய மனிதர்களையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றார். பெரிய மனிதர்கள் தன் வீட்டுக்கு வந்ததுபற்றி அந்தப் பையனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. “உன்னுடைய தகப்பனார் ஏட்டுச் சுவடிகள் வைத்திருந்தாராமே! அவற்றை எல்லாம் நீ வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார் ஒருவர். "இருக்கின்றன. இதோ கொண்டுவந்து காட்டுகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்று சுவடிகளையெல்லாம் கொண்டு வந்து போட்டான். அவற்றில் சிலவற்றைக் கறுப்புக் கயிற்றிலும் வேறு சிலவற்றை மஞ்சள் கயிற்றிலும் கட்டியிருந்தார்கள். இவ்வாறு வெவ்வேறு வகைக் கயிற்றினால் “ஏன் கட்டியிருக்கிறார்கள்?” என்று கேட்டபோது, “மஞ்சள் கயிறு கட்டியவையெல்லாம் இசைக் கவிகள், கறுப்புக் கயிறு கட்டியவை வசைக் கவிகள்” என்றான்!

“அந்தச் சுவடிகளில் வளையாபதி இருக்கிறதா?” என்று ஐயர் கேட்டார். “இதோ இருக்கிறதே!” என்று ஒரு சுவடியை எடுத்து