இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
பூமியின் புன்னகை
சாமியை நம்பித் தொழுதபின்னே-இங்கு
சத்தியம் ஜெயிக்க வேணும் என்றே
பூமியில் முழுதும் தேடியபின்-காலில்
புழுதியும் படிந்தே வாடியபின்
காமக் குரோத லோபத்தால்-வீண்
கயமைக் குணத்தொடு தாபத்தால்
மாமிசம் விற்பவர் நடுவினிலே-நான்
மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்
பித்தர்கள் நிறைந்த உலகினிலே-நான்
பேதைமை நீங்கித் தவிக்கின்றேன்
எத்தர்கள் மலிந்த இந்நாளில்-நான்
ஏழ்மையில் நலிந்து கொதிக்கின்றேன்
கொள்கையை விடவும் முடியவில்லை-ஊரைக்
கொள்ளை இடவும் துணியவில்லை.
உண்மையைத் தேடி ஓய்ந்துவிட்டேன்-உயிர்
உள்ளதை நாடி மாய்ந்துவிட்டேன்
பூமியில் வல்லவர் நடுவினிலே-நான்
பொய்யை எதிர்த்துக் கொதிக்கின்றேன்
மாமிசம் விற்பவர் நடுவினிலே-நான்
மலர்களைத் தேடித் தவிக்கின்றேன்.