பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விபரம்


உய்வதை யோர்ந்து கொண்டவ்
வூராருக் குணர்த்தி யூக்கிச்
செய்வதைச் சிறக்கச் செய்யும்
செம்மலும் செப்ப லுற்றான்:
"வைவது சிலராய், வாழ்த்தி
வணங்குதல் பலரா யுள்ள
தெய்வதம் பற்றிக் கொஞ்சம்
தெளிவிப்பீ ரையா!" வென்றே.

“ஆண்டவ னருகன், கர்த்தன்,
அல்லாவென் றழைக்கப் பெற்று
மாண்டகு பொதுமைப் பேரால்
மற்றைய மதங்கள் பேசக்
காண்டகு பொருள்கட் கேற்பக்
கதைகட்டிப் பெயர்கள் சூட்டி,
வேண்டவே தியர்செய் வித்தார்
வெற்றுப்பொய்ச் சிலைவெவ் வேறே!

உயிரென்றிங் குள்ள யாவும்
உண்டாக்கிக் காத்த ழிக்கும்
செயிரொன்று மில்லாத் தெய்வம்
‘சிவனயன் திருமா' லென்பர்;
'அயிரொன்று மிவற்றி லில்லை.
அஞ்ஞானிக் கன்றி' யென்பர்;
பெயரென்று பெறும்பொ ருள்,பின்
பிரம்மமா வதுயெவ் வாறே?

மண்ணினில் தோன்றி யுள்ள
மரஞ்செடி, விலங்கு, புட்கள்.
திண்ணிய மக்க ளென்னத்
திகழுமிச் சீவ ராசி,
எண்ணிடும் பிறப்பி றப்பா
யியங்க,நீர் நெருப்புங் காற்றும்
நண்ணியே யிரண்டற் றொன்றி
நமக்குள்ளு மிருப்பு தன்றோ?