பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

மதிப்பித்த னான்‌ மாமா, மாமாவின்‌ மகளாய்த்‌ தோன்றிப்‌
புதிப்பித்த பாவை யென்னப்‌ பொலிகின்ற மாணிக்‌ கம்‌,பொன்‌
துதிப்பித்த னான தன்றித்‌ தூயவ னான சத்யன்‌,
கொதிப்பித்துக்‌ கொண்ட கும்பி, குளிர்வித்தா ளாணவால்‌ வேணி!

காரிகை கணவனைக்‌ காய்தல்‌



இந்தநாள்‌ வரையு மெந்த இளைஞனு மிவ்வா றாய்த்தன்‌
தந்தையை யெதிர்த்துப்‌ பேசித்‌ தரக்குறை வாக்கக்‌ காணாள்‌,
சிந்தையும்‌ குன்றிக்‌ செல்வி, செய்வதும்‌ தெரியா தன்று
நொந்துபின்‌, மகிழ்ந னுக்கந் நோய்பகிர்ந்‌ தளிக்க லானாள்‌;

"பேர்நின்ற பெரியா ரென்று பின்முன்னெண்‌ ணாம லின்று,
கூர்நின்ற குச்சி கொண்டு குத்தலொத்‌ துமது தம்பி,
நேர்நின்று பேசும்‌ போதென்‌ நெஞ்செலாம்‌ பதற, நீண்ட
தேர்நின்ற வாறு நின்றேன்‌ திகைத்திருந்‌ தீர்நீர்‌?" என்றாள்‌.

சத்தியன்‌ சந்தர்ப்பவாதியாகச்‌ சாற்றுதல்‌


"அம்மியே பறந்த தின்றிவ்‌ வாகாயம்‌ தனிலென்‌ றால்‌,பின்‌
இம்மியும்‌ பயனில்‌ லாத இலையிதன்‌ கதியென்‌ னாகும்‌?
கும்மியா நானும்‌ கொஞ்சம்‌ கூடச்சேர்மந் தடிப்ப தற்கும்‌!
நிம்மதி நிலைக்க நெஞ்சை நீவுவேன்‌ வாஇங்‌" கென்றான்‌.

பெண்ணைப்‌ பெற்ற அப்பா பெருமையிழந்தாரெனல்‌


"அண்ணனே யன்றோ அந்த அழகுத்தம்‌ பிக்கு நீரும்‌!
எண்ணெயே யின்‌றிக்‌ கூட ஏற்றுவீர்‌ விளக்கை! யென்ன
பண்ணியும்‌ பயனொன்‌ றில்லை; பாவமென்‌ னப்பா பெற்ற
பெண்ணையும்‌ கொடுத்துப்‌ பின்தம்‌ பெருமையு மிழந்தா" ரென்றாள்‌.