மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 7
உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல,
வரைசெறி சிறுநெறி நிறையுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி, அழிதகவு
உடைமதி-வாழிய, நெஞ்சே! நிலவு
என நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஒதம் போல,
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே.
பக்க மலையைச் செறிந்த சிறிய வழியிலே மந்தையாய்க் கூட்டங்கூடிச் செல்லும் காட்டுயானைகள்;
உண்ணாமையினாலே ஒட்டிப்போன வயிற்றினையுடைய நீராடாத விரதத்து ஆன்றோரைப் போல அழகழியாநின்ற குன்றத்தினைக் கடந்து, பொருளீட்டுதலும் இயலுமாறில்லை;
சிலவாகிய ஐந்து பகுதியைப் பொருந்திய கூந்தலாற் பொலிந்த தலைவியது நல்ல மார்பினைப் பொருந்தியபடியே வீட்டிடத்தே தங்கிவிடின் வறுமையை அஞ்சாநின்றாய்;
குன்றங் கடந்து சென்று ஈட்டும் பொருளைக் குறித்து;
நிலவு என்னும்படியாக நெய்யாற் கனிந்த நெடிய வேற்படையையும் மின்னாநின்ற வாட்படையையும், மழையை ஒத்த பல தோற்கிடுகுப் படையையும், பெரிய வள்ளன்மையையும் உடையவரான சோழரது, ஒடக்கோலை முழுகச் செய்யும் நீத்தத்தையுடைய காவிரியானது சென்றடையும் கடற்பெருந் துறையினிடத்தே, இறால்மீனோடு வந்து கோதையோடு பெயர்ந்து செல்லும் பெரிய கடலலையைப் போல;
போதல் தவிர்தல் என்னும் இரண்டனுள் ஒன்றினிடத்தும் துணிவினைக் கொள்ளாயாய்ப், போவதும் வருவதுமாக இருப்பாய்;
நெஞ்சே! நீ வாழ்க!
(அன்றி, அழிவுண்டாக நீ பிளக்க என்று, தலைமகன் இடைச்சுரத்துத் தன்னெஞ்சினைக் கழறிச் சொன்னான் என்க.)