குடும்பப் பழமொழிகள்/மனிதன்

விக்கிமூலம் இலிருந்து

 

மனிதன்

பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான். -சீனா

உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி. -ஆர்மீனியா

உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி. -( ,, )

ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும். - இதாலி

மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை. -லத்தீன்

நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.
-( ,, )

மனிதன் நடமாடும் பிணம். - ரஷ்யா

ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன் பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் ஓராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும் கழித்திருக்க வேண்டும். -( ,, )

ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே. -ஸ்பெயின்

மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை. -ஆப்பிரிகா

மனிதன் தானே தனக்குச் சயித்தான். -இந்தியா

மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.
- அரேபியா

மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள். -( ,, )

மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது. -கன்ஃபூஷியஸ்

மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.

-ஹாலந்து
வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்றால், அவன் விலங்காவான்.
-சுவின்பர்ன்

தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.

-இங்கிலாந்து

மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம். -இங்கிலாந்து

மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே. -( ,, )

சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான். -( ,, )

வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே. - மார்க்ட்வெயின்

மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு. -ஷேக்ஸ்பியர்

இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை. -ஸ்பென்ஸர்

புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம். -ஃபிரான்ஸ்

மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான். -ஜெர்மனி

மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கயிறு மனிதன். -நீட்ஷே

[மனிதனே தன்னிலும் மேம்பட்ட அதிமானிடனாகப் பரிணமிக்க முடியும் என்ற கொள்கையுடையவர் நீட்ஷே, என்ற தத்துவஞானி.]
மனிதனுக்கு மனிதன் கடவுள். - கிரீஸ்

பெரும்பாலான மனிதர் தீயவர். -( ,, )

மனிதன் பகுத்தறிவுள்ள விலங்கு. -லத்தீன்

மனிதன் தனக்கு எவ்வளவு வேண்டியவனோ அதைவிட அதிகமாகத் தேவர்களுக்கு வேண்டியவன். -( ,, )

மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான். -( ,, )

மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப் பொருளாவான். -செனீகா

ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது. -யூதர்