அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/நீ

விக்கிமூலம் இலிருந்து


7. நீ



அண்ணலே! பேரறிஞர் பெருந்தகையே! தென்னாட்டுக் காந்தி நீ!

அன்பு நீ! அறிவு நீ! பண்பு நீ! பைந்தமிழின் சீரிளமைத் திறம் நீ!

பருகா அமுதம் நீ! பாலின் நெய் நீ! பழத்தின் ரசம் நீ! பாட்டின் பண் நீ!

பரிதி நீ! கொள்ளும் கிழமை நீ!

உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ!

உள்நின்ற நாவிற்குள் உரையாடி, நீ! பாகன் நீ!

கருவாய் உலகுக்கு முன்தோன்றி, கண்ணறிவு ஒளிகாண கருவும் நீ!

திருவே! என் செல்வமே! என் புகழே, நீ!

செழுஞ்சுடரே செழுஞ்சுடரின் சோதியே நீ!

உருவே! என் உறவே! ஊனே! ஊனின் உள்ளமே!

உள்ளத்தின் உள்ளே உரைகின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே!

கண்ணின் கருமணியே! மணியாடு பாவாய், நீயே!

பகைவர்க்குத் தீ, நீ! தகிப்போர்க்கு நீர், நீ!

எளியோர்க்குத் திண்மை, நீ! வழி பிறழ்ந்தார்க்குத் திசை, நீ

அந்தத் திசையில் திகழும் இயற்கை, நீ! இயற்கையின் எழில் நீ

விண் நீ! விண்ணில் ஒளிரும் மின், நீ! ஞாயிறும் திங்களும், நீ

காய் நீ! கனியின் நின்ற சுவை நீ!

மணம் விரவும் நுகர்ச்சி நீ! நிலை குலையா அரசியலும் நீ!

நான் - நீயாகி, நேர்மையாகி, நெடுஞ்சுடராகி, நிமிர்ந்து நிற்பதற்கும் வேண்டும் - நீயே!

நாட்டினர் விரும்புகின்ற சோசலிச வித்தும் நீ!

அமைதியான அரசியலுக்குரிய, ஜனநாயகத் தாய் நீ!

வறியவர்கட்கும், உழைப்பவர்கட்கும், சுற்றம் நீ!

பொன் செயும் பொருளாதாரத் தத்துவம் நீ!

மன்பதைக்குத் துணையாகும், அமைதி நீ!

தன்னலத்தை மறுத்த, தாய்மை நீ!

தழைப்பதற்கே நிலைத்து நின்ற, தத்துவச் சுரங்கம் நீ!’

உற்றிருந்த உணர்வுக்கு உருவம் நீ!

உற்றவர்க்கு சுற்றமாய், நின்றாய் நீ!

கற்றறிந்த கலைஞானம், முழுமையும் நீ!

பெற்றிருந்த தாய், அவளின் அன்பும் நீ!

பின்னியெனைப் பிணைக்கின்ற, பிணைப்பும் நீ!

வற்றாத அறிவுக்கு மூலமாகத் திகழ்பவர் நீ!

வண்டமிழாள் ஈன்றளித்த தலைமகன் நீ!

உதயத்தின் உச்சியே! உலகத்தின் உண்மையே நீ!

பனிமலரே! பன்னூல் பயனே! பாசத்தின் குருதியே நீ!

திருமணியே தீந்தமிழே! தித்திக்கும் தேன்பாகே நீ!

தீங்கரும்பின் இன்சுவையே! திகழும் சோதியே நீ!

அருளே! அருட்கருவே! அன்பின் இலக்கணமே நீ!

ஒருவனாய் உலகுக்கு வந்துதித்த ஒழுக்கமே நீ!

ஓருருவில் மூவுருவம் ஆனாய் நீ!

கருவறுத்து இந்தியினைக் காய்த்தோன் நீ!

கனித்தமிழின் கனிச்சாற்றால் சுவை தந்தோன் நீ!

மருவற்ற சொல்லாட்சி செய்பவனே, நீதான்!

மான் அமைதி நெஞ்சம் கொண்ட மாமேதை நீ!

அறிவொளியால் எமை ஆட்கொண்ட அருட்செல்வன், நீ!

'வசவாளர் வாழ்கவென, வைதாரை வாழ்த்தியவன் நீ!

திருவிடத்தின் முழு உருவம் தந்தாய் நீ!

ஒசை ஒலியெலாம் ஆனாய் நீ!

ஒண்டா உள்ளங்களில் ஒடுங்கினாய் நீ!

மலைமுகடு மாருதத்தின் மென்மையெலாம் நீ!

பிழைத்தாரைப் பொறுத்தருளும் நீதான்

தேசப்பற்றெலாம் தேக்கமாய் நின்ற ஒளி நீ!

கல்லாதார் மனக் கண்ணைத் திறப்பவன் நீ!

பொல்லாத நெறிமுறைக்கு வெல்லாத வைரி நீ!

பொல்லாங்கை வீழ்த்துகின்ற பகையும் நீ!

நில்லாத ஆணவத்தின் கடும் வலிவைத் தகர்த்த மாறன் நீ!

செல்லாத அரசியலைச் சரிய வைத்த தந்திரி நீ!

செந்தமிழின் காவலனாய் நின்றவனும் நீயே!

குறளெனச் சிறு உருவம் கொண்டாய் நீ!

கண்டு தமிழுண்ட சங்கத் தமிழ் மேதை நீ!

இழையான சொற்களைப் பிழை நீக்கி ஆள்வோய் நீ!

இச்சைக்கு வளையாத இல்லறத் துறவி நீ!

இல்லந்தோறும் வித்தைத் தூவினாய் நீ!

பெரிய மனதால் எதிரியையும் ஆட்கொள்ளும் அரிய பிறிவி நீ!

பேணும் தொண்டர்கட்குப் பெரியவன் நீ!

என்றென்றும் மாறாத இன்பம் நீ! எழிலார்ந்த காட்சி நீ!

எண்ணங்களைச் சிறையிடா ஏந்தல் நீ!

எந்நாடும் தலை வணங்கும் இனிய பண்பாளன் நீ!

பேராயிரம் பரவி, புவியார் வாழ்த்தும், எமது அண்ணன் நீ!

பிரிவிலாத தோழர்கட்கு தேர்வாய் நின்ற பயன் நீ!

அரச தந்திரத்தின் ஊற்று நீ!

மக்களை ஏய்க்கும் நோய்க்கும் மாமருந்து நீ!

வஞ்சம் அல்லை! கயமை அல்லை நீ!

வன்கொடுமை நெஞ்சம் அல்லை நீ!

மயக்கமல்லை! புதிருமல்லை நீ!

குழப்பம் அல்லை: நஞ்சும் அல்லை! ‘நா’ சறுக்கி வீழ்வானும் அல்லை நீ!

நப்பாசை அல்லை! பேராசை அல்லை! நாச நினைப்புமல்லை நீ!

தஞ்சமென வீழும் நோஞ்சான் அல்லை! பிறிதும் அல்லை! அல்லை நீ!

சிந்தனையின் சிகரமே நீதான்! உனது எல்லை அறிவின் எல்லை!

உன்னை நெருங்குவோருக்கு இல்லை, தொல்லை!

தமிழ் முல்லைக் கொழிக்கின்ற மலர்க் கொல்லை நீ!

பற்றி நின்ற வாழ்க்கை வேதனைகள், பறக்க வேண்டில்

பரவியிருக்கும் பஞ்சமெல்லாம் நகர வேண்டில் -

சுற்றி நின்ற லஞ்ச லாவண்யங்கள் ஒழிய வேண்டில்;

செந்தமிழின் பகையான இந்தி ஒழிய வேண்டில்;

உற்றதொரு தமிழகத்தில் உயர்வே வேண்டில்;

உழைப்பவர்கட்கு உயர்வளிக்கும் உன்னத வாழ்வு வேண்டில் -

கொற்றமெலாம் மக்கட்கு ஆக வேண்டில்;

காஞ்சி நிலக் கருவூலம் அண்ணனே - வேண்டும் நீயே!

பட்டுடுத்த மாட்டாய் நீ பகட்டாக வாழ விரும்பாய் நீ!

பவழச் செவ்வாய் வெற்றிலையால் சிவக்கின்ற இதழுடையோய் நீ!

பாதம் நோவ, இட்டடியிட்டு ஊரூர்ஒடி, கட்டவிழ்ப்பாய் கொள்கையை நீ!

விட்டொழிய மாட்டாய் குறள் வாழ்வை நீ!

விலை பேச முடியாது உன்னையே நீயே!

வட்ட நிலா வடிவம் கொள் குடையின் கீழ்

சுட்ட செழும்பொன் சுடரவிழ்க்கும் கோன் நீ!

திருப்பெயராம் உன் மூவெழுத்தைச் செப்பாராகில்;

திரிவண்ணந் திறங் கொள்கைப் பேசாராகில்;

இரு வண்ணக்கொடியினை ஒருகாலும் ஏந்தாராகில்;

உன் பொதுக் கூட்டத் தேனமுதை உண்ணாராகில்;

அரசியல் நோய் கெட உம்மை அணுகாராகில்;

உன் அணிவகுப்பில் முன் நிற்க உந்தி ஓடி வாராராகில்

பெரு நோய்கள் அரசியலில் தொத்திச் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகிப் பிறந்தார் என்பேன்!

குறளானை, இலக்கியக் குன்றானை, கற்பனை ஊர்தியானை,

தத்துவக் கடலானை, தூற்றல் நஞ்சை உண்டானை,

நாடகத் துறையானை, நல்ல பகுத்தறிவால் குறை தீர்ப்பானை,

இன்னமுதச் சொல்லாட்சி ஈவானை, நடமாடும் இலக்கியத்தானை,

மக்களவையில் மருள் நீக்கிய பேச்சால் ஐயம் தீர்த்தானை!

என் உள்ளத்து உள்ளே ஒளிந்து வகை செய்யும் நிறைவோனை

காலத்தின் ஏழெட்டோடு, ஈரெண்டாண்டையும் கடந்தானைக்,

காஞ்சி வாழ்ந்திட்ட பேரறிஞனை, உணராதார் செந்நெறிகளைப் போற்றாதாரே!

எல்லாமே எனது அண்ணன் என்று நின்றாய் போற்றி,

மல்லோட்டி எமை மக்களாக்கிப் படைத்தாய்ப் போற்றி

மதி பழுத்தறம் சொற் கணிச்சாறுகளால் எமை மதிக்க வைத்தாய் போற்றி,

கல்லாதார் காட்சிக்கும் அரும்பொருளானாய் போற்றி,

கற்றார் இடும்பைக் களைவாய்ப் போற்றி,

கொல்லாத சொல்லளிக்கா நாவோய் போற்றி:

தென்னாட்டுக் காந்தியெனும் பேரறிஞர் போற்றி!

காஞ்சிக் கோட்டமே, கடிகையே போற்றி! போற்றி!