பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

களே பாடப்பட்டு வந்தன. அக் காலத்தில் நாடகங்களை இயற்றிய ஆசிரியர்கள் எல்லா நாடகங்களையும் இசை நாடகமாகவேதான் எழுதினார்கள். திருவாளர் அருணாசலக் கவிராயர் அவர்களின் ‘இராம நாடகம்’ இதற்குச் சான்று கூறும்.

சில ஆண்டுகளுக்குப் பின் இந்த நிலை மாறி நடிக நடிகையர் தமது திறமைக்கும் புலமைக்கும் ஏற்றபடி நாடகக் கதைக்குப் புறம்பாகப் போகாமல் கற்பனையாகவே பேசிக்கொள்ளும் முறை வழக்கத்தில் வந்தது. இவ்வாறு நடைபெறும் உரையாடல்கள் சில சமயங்களில் வரம்பு மீறிப் போய்விடுவது முண்டு.

இந்தச் சமயத்தில்தான் நமது சுவாமிகள் தமிழ் நாடக உலகில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வழிகோலினார். அந்தக் காலத்திலே நடைபெற்று வந்த புராண, இதிகாச, கற்பனை நாடகங்களுக்கெல்லாம் பாடல்களும் உரையாடல்களும் எழுதி வரம்புக்குட்படுத்தியதோடு, புதிய நாடகங்கள் பலவற்றையும் இயற்றி உதவினார்.

இவ்வாறு எழுதப்பட்ட நாடகங்களே சென்ற இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் நாடக மேடைக்கலை அழிந்துபோகாமல் காப்பாற்றி வந்தன. இன்றும் ஸ்பெஷல் நாடக நடிகர்கள் பலருக்கு உயிர்கொடுத்து நிற்பவை சுவாமிகளின் கோவலனும், வள்ளி திருமணமும், பவளக்கொடியும்தாம்.

ஒரு நாடகம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், அந்நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும் நியதியும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். சுவாமிகள் தமது வாழ்நாள் முழுதும் இதையே வலியுறுத்தி வந்தார்.