தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/012-066

விக்கிமூலம் இலிருந்து

புதிய வீடு

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் ஒரு புதிய வீடு கட்டி, அதில் ஆசிரியப் பெருமான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவரது விருப்பப்படியே ஆசிரியருடைய தாய் தந்தையர் அங்கே வந்து வாழத் தொடங்கினார்கள். 1877-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அந்தப் புதிய வீட்டில் ஆசிரியப் பெருமான் குடியேறினார். தம் மனைவியாரோடு வாழத் தொடங்கினார். மடத்திலிருந்தே இவரது குடும்பத்திற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் கிடைத்தன. ஆசிரியப் பெருமானிடம் தேசிகர் காட்டிய பேரன்பையும் அவரது சிறந்த ஒழுக்கத்தையும் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

மதுரையில் அந்தக் காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் புறப்பட்டுச்செல்ல ஏற்பாடாயிற்று. அங்கிருந்து வேறு தலங்களுக்கும் போகலாம் என்று தேசிகர் நினைந்தார். அப்போது தம்முடன் ஆசிரியப் பெருமானையும் வரும்படி அழைத்தார். அப்படியே இருவரும் புறப்பட்டனர். மதுரை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து இன்புற்றார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் ஆசிரியருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்த சுப்பிரமணிய ஐயரை (ஜஸ்டிஸ் மணி ஐயர்) அங்கே முதல்முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.