வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/கோடீஸ்வரர் சொன்ன

விக்கிமூலம் இலிருந்து


1
கோடீஸ்வரர் சொன்ன
பத்து கொள்கைகள்



வாழ்க்கையில் வெற்றிபெற ஒவ்வொருவரும் மிகுந்த துன்பப் படவேண்டும். அப்படிச் செய்யாமல் ஏனோ தானோ என்றிருந்தால் எவரும் வெற்றி பெறவே முடியாது. உதாரணமாக ராக்பெல்லர், வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பாருங்கள்: இரண்டு டாலர் கூலிக்காக முப்பது மணி நேரம் உருளைக்கிழங்கு வயலில் வேலை செய்த ராக்பெல்லர், பிற்காலத்தில் உலகிலே கோடீஸ்வரராக பிரபலம் அடைந்ததற்கு அவருடைய தளராத உழைப்புத்தான் முக்கிய காரணமாகும்.

ராக்பெல்லர் ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். விவசாயத் தொழிலில் அவருக்கு நன்கு ஆர்வம் இருந்தது. வாழ்க்கையை நடத்த அவர் முதலில் உருளைக்கிழங்கு வயலில் வேலை செய்து வந்தார். முப்பது மணிநேரம் வயலில் அவர் வேலை செய்தால் இரண்டு டாலர்

கூலி கிடைக்கும். வேலை அதிகமாகவும் கூலி குறைவாகவும் இருக்கிறதே என்று அவர் பார்க்கவில்லை. அதற்குப்பதில் தம்முடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

உருளைக்கிழங்கு வயலில் வேலை போன பிறகு அவர் பல தொழில்களைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு வேலையிலும் அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி, செய்யும் தொழிலைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டார். நாளடைவில் அவர் சொந்தமாகவே ஏதாவது தொழில் நடத்தவேண்டும் என்று எண்ணினார். அதன் காரணமாக அவர் ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி என்ற ஒரு மோட்டார் எண்ணெய்க் கம்பெனியை ஏற்படுத்தினார். அவருடைய விடா முயற்சியாலும், அயராத உழைப்பாலும் அக்கம்பெனி சிறிது காலத்திலேயே மிகப் பெரியதாக ஆகியது. தற்காலம் அக்கம்பெனி உலகத்தின் எண்ணெய் ஏற்றுமதியையும், விலையையும் நிர்ணயிக்கக்கூடிய வகையில் வளர்ந்து உன்னதமான நிலைக்கு வந்து விட்டது.

ராக்பெல்லர், வாழ்க்கையில் தாம் வெற்றி பெற்றதற்குக் கடைப்பிடித்த முறையை அவரே கூறிருக்கிறார். அதை மற்றவர்களும் பின்பற்றி, எல்லோரும் அவரைப் போல் முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் எங்கு சென்றாலும் தாம் வெற்றி கொண்ட ரகசியத்தை பிரசாரம்செய்து கொண்டிருந்தார்.

ராக்பெல்லரின் பத்து கொள்கைகள்:

1. வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லுங்கள்

2. உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.

3. மனதைத் தளர விடாதீர்கள்.

4. உண்மையைக் கடைப்பிடியுங்கள்.

5. நீங்கள் இல்லாவிட்டால், முதலாளிக்குப் பெருத்த நஷ்டம் என்று அவர் எண்ணும் படியாகச் சாமர்த்தியமாக வேலையைச் செய்யுங்கள்.

6. சிறு உத்தியோகத்தில் சேர்ந்து பெரிய பதவிக்கு வரவேண்டும்.

7. பிறர், உங்களிடம் எதிர்பார்ப்பதை விட அெதிகமாகச் செய்யுங்கள்.

8. செய்யும் தொழிலைப்பற்றி நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

9. கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால் வாழ்க்கையில் சந்தோஷத்தையே காண முடியாது.

10. விளையாட்டுகளில் மனதை ஓடவிடக்கூடாது.

இந்தப் பத்து விஷயங்களையும் ஒருவர் கடைப் பிடித்தால் கட்டாயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்று ராக்பெல்லர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.