பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்புரவறிதல்

55


ஒருவன் பல வகையிலும் முயற்சி செய்து சேர்க்கும் பொருள்கள் எல்லாம் தகுதியுடையவர்களுக்கு உதவி செய்தற் பொருட்டே ஆகும்.

தாள் ஆற்றி-முயற்சி செய்து; வேளாண்மை-உபகாரம். 212

3.புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

பிறருக்கு உதவி செய்து வாழ்தலாகிய ஒப்புரவு என்னும் செயலே எல்லா நல்ல செயல்களிலும் சிறந்தது. இதைப் போன்ற வேறொரு நல்ல செயலை இந்த உலகத்திலும், தேவருலகத்திலும் பெறுதல் அரிது.

புத்தேள் உலகம்-தேவர் உலகம்; ஈண்டு - இவ்வுலகம். 213

4.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

உலக நடையை அறிந்து உபகாரஞ் செய்பவன் உயிரோடு இருந்து வாழ்பவனாக மதிக்கப்படுவான். அவ்விதம் ஒழுகாதவன் உயிர் உடையவனாக இருந்தும், இறந்தவர்களுள் ஒருவனாகவே கருதப்படுவான்.

ஒத்தது அறிதல்-உலக நடையை அறிந்து உதவி வாழ்தல். 214

5.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உலக இயல்பு அறிந்து நடப்பதால் உலகத்தாரால் விரும்பப்படும் பேரறிவாளன் பெற்றுள்ள செல்வம், ஊரார் நீர் உண்ணுதற்கு இடமான குளம் நீரால் நிறைந்துள்ளதற்குச் சமம் ஆகும்.

ஊருணி-ஊரார் நீர் உண்ணுதற்கு இடமான குளம்; அவாம்- அவாவும், விரும்பும்; திரு-செல்வம். 215

6.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.