பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

திருக்குறள்


புடத்தில் இட்டுச் சுடச் சுடப் பொன்னானது ஒளி மிகுந்து விளங்கும். அது போலத் துன்பம் மேன்மேலும் வருத்துவதைப் பொருட்படுத்தாது, தவம் செய்வோர்கட்கு மெய்யுணர்வு ஒளியுடன் விளங்கும். 267

8.தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிரையே தான் என்று எண்ணும் சுயநல எண்ணம் முற்றிலும் நீங்கப் பெற்றவனை, இந்த உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் அவன் பெருமை அறிந்து வணங்கும்.

“நான்’ என்ற ஆணவம் அழிந்தவனை உலகத்தார் போற்றுவர் என்பதாம். 268

9.கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவம் செய்வதால் வரும் வல்லமையால் சிறந்தவர்கட்கு எமனை வெல்லுவதும் இயலும்.

கூற்றம் - எமன்; குதித்தல் - கடத்தல் அல்லது வெல்லுதல்; நோற்றலின் ஆற்றல் - தவத்தால் வரும் வல்லமை. 269

10.இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

உலகத்தில் வாழ்க்கை நலன்களைப் (பெற்றிருப்பவர் சிலராக,) பெறாதவர் பலராக இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், தவம் செய்கின்றவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருத்தலே ஆகும்.

இலர்-வாழ்க்கை நலன்களைப் பெறாதவர்; நோலாதவர் - தவம் செய்யாதவர். 270