86
திருக்குறள்
6.நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
நேற்று உயிரோடிருந்த ஒருவன் இன்று உயிரோடு இல்லை (இறந்து போனான்) என்று சொல்லப் படும். நிலைமையாகிய பெருமையையே இந்த உலகம் உடையதாக இருக்கிறது.
நெருநல்-நேற்று; பெருமை-இச்சொல் இங்கே இழிவைக் குறிக்கிறது. 336
7.ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
ஒரு கணப்பொழுது அளவேனும் உயிரும் உடலும் ஒன்று சேர்ந்து வாழும் வகையினை அறியாத மக்கள் கோடிக்கு மேற்பட்ட எண்ணங்களை எண்ணிப் பொழுதினை வீணாகக் கழிப்பர்.
கருதுப-எண்ணுவர்; கோடியும் அல்ல பல-கோடிக்கும் மேற்பட்ட எண்ணங்கள். 337
8.குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
உயிருக்கு உடம்போடு உள்ள உறவு, ஒரு பறவை தான் இருத்தற்கு இடமாயிருந்த கூடு தனியே கிடக்க, அக்கூட்டினை விட்டு வேறிடத்துக்குப் பறந்து செல்வது போன்றது.
குடம்பை-கூடு; முட்டை என்றும் பொருள் கொள்வர். புள்-பறவை. 338
9.உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
இறப்பு எனப்படுவது ஒருவன் உறங்குவதற்குச் சமமாகும். பிறப்பு எனப்படுவது அவன் அவ்வுறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதற்குச் சமமாகும். 339
10.புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
நிலையில்லாத உடம்பில் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கும் உயிருக்குப் புகுந்து குடி இருக்கத்தக்க அழியாத வீடு ஒன்று இது வரையில் அமையவில்லையா?
புக்கில்-புகுந்து குடியிருக்கத்தக்க வீடு; துச்சில்-ஒதுங்கி இருக்கத் தக்க வீடு. 340