பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவுடைமை

107



43. அறிவுடைமை


1.அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

அறிவானது, துன்பம் நேரிடுங் காலத்து அத்துன்பத்திலிருந்து காத்துக் கொள்ள உதவும் கருவியாகும். அன்றியும் உட்புகுந்து பகைவரால் அழிக்க முடியாத உள் அரணும் ஆகும். 421

அற்றம் - துன்பம்; அழிவு.

2.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனம் சென்ற வழியெல்லாம் ஒருவனைச் செல்ல விடாமல், தீமையிலிருந்து நீக்கி, அவனை நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

ஒரீஇ - நீக்கி; நன்றின்பால் - நல்ல வழியில். 422

3.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எத்தகைய செய்தியாக இருந்தாலும், அதனை யார் சொல்லக் கேட்டாலும் (அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல்) அதன் உண்மையை ஆராய்வதே அறிவாகும்.

எப்பொருள்-உயர்ந்த அல்லது தாழ்ந்த செய்தி; யார் யார்-உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்.

சொல்லுவோரை நோக்காமல் சொல்லின் பயனையே நோக்குதல் வேண்டும். 423

4.எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

தான் சொல்லுவதை எளிதாக விளங்கும் சொற்களால் பிறர் மனத்தில் பதியும்படி சொல்லிப் பிறர் சொல்லும் சொற்களிலிருந்து நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பதே அறிவுடைமையாகும்.