பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

திருக்குறள்


இவறல்-உலோபம், செலவு செய்ய வேண்டியவிடத்துச் செய்யாமல் இருக்கும் குணம்; மாண்பு இறந்த மானம் படாடோபம், வீண் ஆடம்பரம், தன் தகுதிக்கு மேம்பட்ட பெருமை; மாணா உவகை-தகுதிக்கு விஞ்சிய மகிழ்ச்சி. 432

3.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

பழிக்கு அஞ்சுகின்ற மேன் மக்கள் தினை அளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையின் அளவான பெரிய குற்றமாகக் கருதுவர்.

தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்கு அளவு கோல். தினை-ஒரு தானியம். பனை-பனம் பழம். 433

4.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

ஒருவன் செய்கின்ற குற்றமே அவனுக்கு அழிவை உண்டாக்கும் பகை ஆகும். ஆகையால், அக்குற்றம் நேராமல் இருத்தலை வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

பொருள் - குறிக்கோள் அல்லது நோக்கம். 434

5.வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நிகழ்வதற்கு முன்பே அக்குற்றத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை (ஒரு சிறிய) நெருப்புப் பொறியின் முன் கிடந்த (பெரிய) வைக்கோல் போர் போல அழிந்து விடும்.

வை-வைக்கோல்; தூறு-குவியல், போர்; கெடும்-அழியும், குற்றம் மிகச் சிறியதாக இருந்தாலும், நீண்ட வாழ் நாளை முற்றிலும் கெடுத்து விடும் என்பது பொருள். 435

6.தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு?

அரசன் முதலில் தன் குற்றத்தை உணர்ந்து நீக்கிக் கொண்டு, பிறகு தன்னைச் சூழ்ந்துள்ளோரின் குற்றங்களைஅறிந்து நீக்க முயல்வானானால், அவனுக்கு நேரக் கூடிய தீமை என்ன இருக்கும்? எத்தகைய தீமையும் இல்லை.