பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியாரைத் துணைக்கோடல்

113


சுற்றத்தவருள் ஒருவராகக் கொள்ளுதல் அரிய செல்வங்கள் பலவற்றுள்ளும் அருமையானதாகும்.

தமர்-தம்மவர், தமக்கு நெருக்கமான உறவினர்; அரசருக்குத் தமர் -அமைச்சர், சேனைத் தலைவர், புலவர் முதலியவர்கள். 443

4.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாந் தலை.

அறிவு, ஒழுக்கம், அநுபவம், வயது முதலியவைகளால் தம்மைக் காட்டிலும் மிக்காராக இருக்கும் பெரியார் தனக்குச் சுற்றத்தவராக இருக்கும்படி நடந்துகொள்ளுதல் மிகவும் வல்லமையுடைய செயல்கள் பலவற்றுள்ளும் தலைசிறந்ததாகும்

வன்மை-வல்லமை, தலை-சிறந்தது. 444

5.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர், சேனைத் தலைவர், புலவர் முதலியவர், அரசாட்சியாகிய உடலுக்குக் கண் போல் இருந்து உதவுபவர் ஆவர். ஆதலால், அரசன் தன்னைச் சூழ்ந்துள்ள அமைச்சர் முதலியோரை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

குடும்பத்துக்குத் தலைவனாக இருப்பவன் தன் சுற்றத்தார், நண்பர், வேலையாட்கள் முதலியவர்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதும் பொருள்.

சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; அமைச்சர் முதலியோர்: சூழ்ந்து-ஆராய்ந்து. 445

6.தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

தகுதி வாய்ந்த பெரியோர் தன்னைச் சூழ்ந்திருக்க, அவர் தம் சொற்படி நடக்க வல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக் கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

இனத்தன்-இனத்தை உடையவனாய் இருப்பவன்; செற்றார்-பகைவர். 446