பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெருவந்த செய்யாமை

147


2.கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

செல்வம் தம்மிடம் நெடுங்காலம் நீங்காமல் இருக்க விரும்புகின்றவர், குற்றம் செய்தோரைத் தண்டிக்கத் தொடங்கும் போது, அளவு கடந்த தண்டனையை அளிக்கப் போவது போல் தொடங்கிக் குறைவாகத் தண்டித்தல் வேண்டும்.

கடிது ஓச்சல்-கோபத்தால் வேகமாகக் கோலினை உயர்த்திப் பிடித்தல்' மெல்ல எறிதல்-அளவில் மீறாதபடி தண்டித்தல்; ஆக்கம்-செல்வம். 562

3.வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிகள் அஞ்சத்தக்க கொடிய செயல்களைச் செய்து ஆட்சி புரியும் கொடுங்கோல் அரசனாக ஒருவன் இருப்பானேயானால், அந்த அரசன் நிச்சயமாக விரைவிலேயே அழிந்து போவான்.

வெருவந்த-அச்சம் தரும் செயல்கள்; வெங்கோலன்-கொடுங்கோல் மன்னன்; ஒருவந்தம்-நிச்சயமாக. 563

4.இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உரைகடுகி ஒல்லைக் கெடும்.

'இந்த அரசன் கொடியவன்' என்று பலராலும் (வயிறெறிந்து) கூறப்படும் பழிச் சொல்லுக்குக் காரணமான அரசன், தன் வாழ்நாள் குறைந்து, விரைவிலேயே இறந்து படுவான்.

இன்னாச்சொல்-பழிச்சொல்;,துன்பம் தரும் சொல்;உறை-வாழ்நாள், ஆயுட்காலம்; கடுகுதல்-விரைதல். 564

5.அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண்டு அன்னது உடைத்து.

எளிதில் காண முடியாத நிலைமையினையும், காண நேரினும் சிடுசிடுப்பான முகத்தினையும் உடைய ஒருவனது பெரிய செல்வம், பேயினால் காக்கப்பட்ட செல்வத்தைப் போன்று எவர்க்கும் பயன்படாத தன்மையுடையதாய் இருக்கும்.