பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றாண்மை

267



2.குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

சான்றோர் நலமாவது அவருடைய குண நலமே. மற்ற நலம் வேறு எவ்வகையான நலத்திலும் உள்ளதொரு நலம் அன்று. 982

3.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊனழிய தூண்.

அன்புடைமை, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் சால்பினைத் தாங்கும் தூண்களாகும்.

நாணம்-பழி பாவங்களைப் புரிய அஞ்சும் குணம்; ஒப்புரவு-உலக ஒழுக்கத்துக்கு ஒத்து நடந்து கொள்ளுதல்; கண்ணோட்டம்-தாட்சண்யம்; வாய்மை-உண்மை; சால்பு-நற்குணம்; ஊன்றிய-தாங்க நிறுத்திய. 983

4.கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

தவம் என்பது ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது. அது போலச் சால்பு என்பது பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாத நற்குணத்தை அடிப்படையாகக் கொண்டது.

நோன்மை-தவம்; சால்பு-நற்குணம். 984

5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

ஒரு செயலைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது அதற்குத் துணையாளர் எல்லார்க்கும் பணிவாக இருத்தல்; அந்தப் பணிவு சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றிக் கொள்ளும் கருவி ஆகும்.

ஆற்றுவார்-ஒரு செயலைச் செய்து முடிப்பவர்; ஆற்றல்-வல்லமை, செய்து முடிக்கும் தன்மை; மாற்றார்-பகைவர்; மாற்றுதல்-வேறுபடுத்தல்; படை-கருவி. 985

6.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லா கண்ணும் கொளல்.