பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

169

முன்னர், இவரது தாயார் முத்துதிருவாயி நாச்சியார். ஏற்கெனவே மணம் புரிந்த கணவர் மூலம் இவர் பிறந்தார். தமது தம்பியியின் அந்நிய ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளால் அவரது அரச பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை தோன்றிய பொழுது கி.பி. 1794-ல் இவரது உள்ளத்தில் பதவி ஆசை எழுந்தது. இராமனாதபுரம் பட்டத்தை தமக்கு அளிக்குமாறு ஆற்காட்டு நவாப்பையும் கிழக்கிந்திய கும்பெனி கவர்னரையும் அடுத்தடுத்து வலியுறுத்தி வந்தார். மறவர் சீமையின் ஆட்சி பீடத்தில் அமருவதற்கு பெண் மக்கள் பலர் அருகதையுடையவர்களாக முன்னர் இருந்தனர் என்ற ஆதாரங்களை கும்பெனியாருக்கு எடுத்துக்கூறி தனது உரிமையை நிலைநாட்ட முயன்றதுடன் அல்லாமல், தனது தம்பியின் மீது பல அவதூறுகளையும் சுமத்தினார். பதவி வெறியின் முன்னர் இரத்தபாசம் பதுங்கிவிடும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இத்துடன் தமது முயற்சியில் முழு வெற்றி பெறுவதற்காக, தமது கணவர் ராமசாமித்தேவன் என்ற மாப்பிள்ளைத் தேவனுடன் மூன்று ஆண்டுகள் சென்னையிலேயே தங்கி இருந்தார்.

ஆனால் கும்பெனியார் சேதுபதி மன்னரை கி.பி. 1795-ல் பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்த பிறகும். இவரை இராமநாதபுரம் சீமையின் அரசியாக அங்கீகரிக்காமல் காலங்கடத்தி வந்தனர். ஆற்காட்டு நவாப்புடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு முரணாக மறவர் சீமையை அவர்கள் தங்கள் நிர்வாகத்தில் இருத்தி வைத்திருந்தனர். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவரிடம் ஏராளமான தொகையை கையூட்டாகப் பெற்றுக் கொண்ட பின்னர், 22-4-1803-ல் இராமனாதபுரம் அரசியாக அல்லாமல் ஜமீன்தாரினியாக நியமனம் செய்தனர். தலைமுறை தலைமுறையாக தன்னரசாக விளங்கிய மறவர் சீமை இவரது பதவிப் பேராசையால் தனது மகோன்னத நிலையை இழந்து கும்பெனியாரது தயவில் வாழும் குறுநிலமாக (ஜமீனாக) மாறியது; கோபுரம் இல்லாத கோயிலைப் போன்று.

ராணி மங்களேசுவரி நாச்சியார், தெய்வ பக்தியும் தரும சிந்தனையும் மிகுந்தவராக விளங்கினார். திருச்செந்துாருக்கு தலயாத்திரை மேற்கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன்