பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாவது - களவியல்


அ௯. இன்பமும் பொருளு மறனு மென்றாங்
      கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற்
      காமக் கூட்டங் காணுங் காலை
      மறையோர் தேஎத்து மன்ற வெட்டனுட்
      டுறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே.

என்பது சூத்திரம்.

இவ்வொத்து என்ன பெயர்த்தோ எனின், களவியல் என்னும் பெயர்த்து; களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயன் இன்றாம் களவென்பது அறம் அன்மையின் [எனில்], அற்றன்று; களவு என்னும் சொற் கண்டுழியெல்லாம் அறப்பாற்படாதென்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற்கோடல், இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர், தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலைவழா[1] மன்றலால், இஃது அறமெனப்படும்.[2] அன்னதாதல் இச்சூத்திரத்தானும் விளங்கும்.

அஃதற்றாக, மேலை யோத்தினோடு இவ்வோத்திற்கு இயைபு என்னை யெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்திணை இறுவாயாக எழுதிணை யோதி அவற்றின் புறத்து நிகழுந் திணைகளு மோதிப் போந்தார். அவ்வெழுதிணையினும் ஒருதலை வேட்கையாகிய கைக்கிளையும் ஒப்பில்கூட்ட மாகிய பெருந்திணையும் ஒ[ழி]த்து இருவரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக்கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின், அவ்விருவகைக் கைகோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின் பின் கூறப்பட்டது. இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக்கருதின் “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” [புறத்திணை-௫௯] என்னும் மாட்டேறு பெறாதாம், அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க.

மற்றும், அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின்,

“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்
றாங்கநால் வகையினு மறைந்த சார்வொடு
மறையென மொழிதன் மறையோ ராறே” [செய்யுளியல்-௧௭௮]

என்பதனான் இந்நால்வகையும் இதனுள் உரைக்கப்படுகின்றதென்று கொள்ளப்படும். காமப்புணர்ச்சி யெனினும், இயற்கைப் புணர்ச்சி யெனினும், முன்னுறு புணர்ச்சி யெனினும், தெய்வப்புணர்ச்சி யெனினும் ஒக்கும். இவையெல்லாம் காரணப்பெயர். அஃதாவது, ஒத்தார் இருவர் தாமே கூடுங் கூட்டம், இடந்தலைப்பாடாவது, இயற்கைப்புணர்ச்சி

புணர்ந்த தலைமகன் பிற்றைஞான்றும் அவ்விடத்துச் சென்று எதிர்ப்படுதல். பாங்கற் கூட்டமாவது, இப்புணர்ச்சி பாங்கற் குரைத்து, யெமக்குத் துணையாக வேண்டு[3]மென்ற


  1. ‘அறநிலைவழாமனிற்றலால்’ என்றிருப்பின் நலம்.
  2. ‘இஃதாமெனப்படும்’ என்று பிரதியிலுள்ளது.
  3. ‘மென்றவழி’ என்றிருத்தல் வேண்டும் போலும்.

18