பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்ததீர்த்தர்

479

ஆனபிலாக்சிஸ்


ஆனந்ததீர்த்தர் துவைத சிந்தாந்தத்தை நிலைநாட்டிய ஆசாரியர். பார்க்க: மத்துவாசாரியர்.

ஆனந்தரங்கப்பிள்ளை (1709-1761): சென்னைக்கு அருகில் உள்ள பிரம்பூரில் 1709-ல் பிறந்தார். இவர் தகப்பனார் பெயர்

ஆனந்தரங்கப்பிள்ளை

திருவேங்கடம் பிள்ளை. தம் மைத்துனரான நைனியப்பப் பிள்ளையின் தூண்டுதலின்பேரில் திருவேங்கடம் பிள்ளை புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது புதுவையில் நிறுவப்பெற்றிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியார் திருவேங்கடம் பிள்ளையின் உதவியைக் கொண்டு தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர் 1726-ல் இறக்கவே, அப்பொழுது பிரெஞ்சுக் கவர்னராயிருந்த லென்வார் (Lenoir) இவருடைய மகனான ஆனந்தரங்கப்பிள்ளையை அப்பதவிக்கு நியமித்தார். ஆனால் 1740-ல் நிகழ்ந்த மகாராஷ்டிரருடைய தென்னிந்தியப் படையெழுச்சியினால் நாட்டில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன.

1742-ல் டூப்ளே பிரெஞ்சிந்தியக் கவர்னர் ஆனார். அதுமுதல் ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சிந்தியாவில் உயர் பதவியையும் செல்வாக்கையும் பெற்றார். 1754-ல் டூப்ளே கவர்னர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் 1761-ல் புதுச்சேரியை முற்றுகையிட்டுத் தம் வசப்படுத்தினர். இச் சம்பவத்திற்கு நான்குநாள் முன்னதாகவே ஆனந்தரங்கப்பிள்ளை இறந்தார் (12-1-1761).

பதினெட்டாம் நூற்றாண்டில் தங்கள் ஆதிக்கத்தை இந்தியாவில் பரவச்செய்ய ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் செய்த முயற்சியில் பிரெஞ்சுக் கவர்னருக்கு அருந்துணைவராய் நின்று பேருதவி செய்தவர் ஆனந்தரங்கப்பிள்ளையே. இவருடைய ஆலோசனையைக் கேட்டே டூப்ளே எல்லா அலுவல்களையும் நடத்திவந்தார். இவர் தமிழ் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் அதிகப்பற்றுடையவர். தெலுங்கு, இந்துஸ்தானி, பார்சி முதலிய பல மொழிகளிலும் இவருக்குப் போதிய பயிற்சி இருந்தது. இவரை வள்ளல் என்று புலவர்கள் போற்றியுள்ளனர். இவருடைய மற்றொரு சாதனை இவர் தமிழில் எழுதிவைத்துள்ள தினசரிக் குறிப்புக்களேயாகும்.

இக்குறிப்புக்கள். 1736ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 1761 வரை எழுதப்பட்டுள்ளன. குறிப்புக்கள் எழுதப்படாத நாட்களும் உண்டு. 1846-ல் தான் முதன்முதல் இக்குறிப்புக்களைப் பிள்ளை அவர்களின் வீட்டில் கலுவா மொம்பிரேன் (A Galloi-Montburn) என்பவர் கண்டுபிடித்தார். ஜூலியேன் வென்சோன் (Julien-Vinson) என்பவர் இக்குறிப்புக்களில் சில பகுதிகளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பு வேலை 1894ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுப் பன்னிரண்டு தொகுதிகள் வெளிவந்துள்ளன. எஸ். ஆர். பா.

ஆனந்திபாய் (?-1794) மகாராஷ்டிர பேஷ்வாவான ரகோபா என்னும் இரகுநாதராவின் மனைவி. இரகுநாதராவ் இவளை 1755-ல் மணந்துகொண்டான். இவள் அழகிற் சிறந்தவளாயினும் கொடிய உள்ளம் படைத்தவள். இவள் தூண்டுதலுக்கிணங்கி இரகுநாதராவ் அவனுடைய உடன்பிறந்தான் மாதவராவிற்குப் பிரதிநிதியாக இருந்து முழு அதிகாரத்தையும் செலுத்தி வந்தான். 1765ல் இரகுநாதராவை மகாராஷ்டிர இராச்சியத்தில் ஒரு பகுதியை உரிமை கொண்டாடுமாறு இவள் தூண்டினாள். ஆயினும் இவ்வெண்ணம் கைகூடவில்லை. 1773-ல் பேஷ்வாவாக இருந்த நாராயணராவை இவள் சூழ்ச்சியால் கொல்லுவித்துத் தன் கணவனுக்குப் பேஷ்வா பதவி கிட்டுமாறு செய்தாள். இவளது துர்ப்போதனையால் இரகுநாதராவ் பல தவறான செயல்களைச் செய்துவந்தான். இவள் கணவனுக்கு இவளிடம் இருந்த அளவிறந்த அன்பும் அச்சமும் மகாராஷ்டிர வரலாற்றின் போக்கையே பாதித்தது. இவள் கணவன் இறந்து 10 ஆண்டுகள் கழித்து 1794-ல் இறந்தாள். தே. வே. ம.

ஆனபிலாக்சிஸ் (Anaphylaxis) ஒரு விலங்கின் உடலில் உள்ள புரோட்டீனை அந்தப் புரோட்டீன் இல்லாத மற்றொரு விலங்கின் உடலில் ஒருமுறை புகுத்திச் சுமார் பத்து நாட்களுக்குப்பின் அதே பொருளை மீண்டும் புகுத்தினால், அந்த விலங்கிற்குக் கொடிய கோளாறுகள் ஏற்பட்டு, அதன் உயிருக்கே ஆபத்து நேரக்கூடும். இதற்கு ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சி (Anaphylactic shock) என்று பெயர். விலங்குடலில் தோன்றும் இந்நிலையைப் பொதுவாக ஆனபிலாக்சிஸ் என்பர். அன்னியப் புரோட்டீனால் இயங்கு தசைகள் சுருங்குவதாலும், இரத்தத் தந்துகிகளின் வழியே மிக்க கசிவு நிகழ்வதாலும் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சியால் நேரும் கோளாறுகள் தோன்றுகின்றன.

சீமைப்பெருச்சாளியின் உடலில் சிறிதளவு குதிரையின் சீரத்தை (Serum) மேற்கூறியவாறு இருமுறை புகுத்தினால் அது கொடிய நோய்க்கு வசமாகும். முதலில் அதற்கு அயர்வு ஏற்படும்; நாடி வேகமாக அடிக்கும்; சில நிமிடங்களுக்குள்ளே இறந்துவிடும். அது இறக்காமல் உயிர் தப்பினால், மீண்டும் அச்சீரத்தைப் புகுத்தினாலும் சில வாரங்கள் வரை அதற்கு அதிர்ச்சி ஏற்படாது; எதிர்க்கும் சக்தி உண்டாகிவிடும். ஆனால் சில காலத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்புச் சக்தி குறைந்துகொண்டே வந்து மறைந்துபோகும். ஆனபிலாக்சிஸ் நிலையிலுள்ள ஒரு பிராணியின் சீரத்தை வேறொரு பிராணிக்குப் புகுத்தினால் அதற்கும் இவ்வதிர்ச்சி உண்டாகும். இந்நிலை தாயினிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் அடையக்கூடும்.

ஒவ்வொரு புரோட்டீனும் தனிப்பட்டவகையான ஆனபிலாக்சிஸ் நிலையைத் தோற்றுவிக்கும். ஒரு பொருளினால் ஆனபிலாக்சிஸ் நிலை ஏற்பட்டால் அது வேறொரு பொருளினால் பாதிக்கப்படாது. ஆகையால் இப் பண்பைக்கொண்டு ஒரு கலவையிலுள்ள புரோட்டீன்களைப் பிரித்தறியலாம். ஆனபிலாக்கிஸ் அதிர்ச்சியின் வேகம் ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு அளவு இருக்கும். சில விலங்குகள் ஆனபிலாக்சிஸ் அதிர்ச்சிக்கு எளிதில் வசமாகக்கூடும். சில எளிதில் வசமாகா.

உடலில் இல்லாததொரு புரோட்டீனை உடலில் புகுத்தினால் அது ஒரு நஞ்சைப்போல (Antigen) உடலைப் பாதிக்கிறது. ஆதலால், அப்பொருளுக்கு ஓர் எதிர்ப்பொருளை (Antibody) விலங்கின் திசுக்கள் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு புரோட்டீனுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட எதிர்ப்பொருள் தோன்றும். எதிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும் புரோட்டீன் இயற்கை