பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

அப்புருஷவுரு மறைந்தவிடத்து இறப்புண்டென்பதும் அனுபவமாகும். இத்தகைய புருஷன் தன்னைத்தானறிந்து ததாகதமாம் அத்துவிதமாகுங்கால் புருஷனென்னும் ரூபமும், நாமமென்னும் ஆன்மனுமற்று அநித்திய வனாத்தும் நிருவாண மடைகின்றான். இவற்றையே நாமரூபமாம் இரண்டற்ற நிலையென்னப்படும். இத்தகைய நிலையை அடைந்த பெரியோர்களே இறப்பும் பிறப்புமற்று காலனையுங் காமனையுஞ் செயித்துக் கொண்டவர்களாதலின் அவர்களது மேலாய சிறப்பைக் கொண்டு அவர்களை பகவனென்றும் ஈசனென்றும் கடவுளென்றும் பல பெயர்களால் கொண்டாடி வருகிறார்களன்றி மற்றுமோர் இறப்பும் பிறப்புமற்ற மக்கள் காணா பொருளுண்டென்பது ஆகாயக்கோட்டை என்றுமிடியாதென்று கூறுவதற் கொக்கும் மொழிகளினுற்பவங்களையும் அதன் பொருட்களையும் நன்குணர்ந்து பேசுவதே அழகாம்.

- 6:46; ஏப்ரல் 23, 1913 –
 

106. வேதநாயகம் சாஸ்திரியார்

வினா : தஞ்சைமாநகர் சுவிசேடக்கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களால் சின்னாட்களின் முன்ன ரியற்றியச் சீட்டுக்கவி ஒன்று சிலரால் கிடைக்கப்பட்டன. அஃதை கண்ணுற்ற போது எம்மனதிற் பதியாத இடங்களிருக்கக்கண்டும் பால் வினவலானேன் அவை பின்வருமாறு:


அகஸ்தியன் சொன்னதோர் ஞானத்தில், ஐம்பத்தாறு குற்றங் கண்டோம்
ஔவை யாத்திச்சூடி கொன்றை வேந்தனில், முப்பதைந்துக் குற்றமறிந்தோம்
அலங்கோலச் சொற்பொருத்தன் பாடலை, ஆகாதெனத் தள்ளினோம்
அருணகிரியான் பாடலை பாதியும் பிழையாக்கி, அப்பா லெறிந்துவிட்டோம்
ஒளவையார் பாடலது கிழவிப்பாட்டானதால், அதையும் பொறுத்தருளினோம்
திருவள்ளுவன்குறளை மெச்சினோம் காமப்பால், செய்ததோர் குற்றமவர்மேல்
திருவாசகம் சொன்ன மாணிக்கவாசகனை, திருடனென்றே எண்ணினோம்
தேவடியாள் முத்துதாண்டவன் பாடலைத் தெருவிற் கிழித்தெறிந்தோம்
தாயுமானவர் பாடல் நன்றாயினுமது, மோசமென் றுள்ளத்தி லுணர்ந்தோம்
சைவனுக்கும் விஷ்ணுபத்தனுக்கும் பெரிய, சண்டைக ளெடுத்துவிட்டோம்
தத்துவ ஞான நிடத முதலானதை, சாங்கோபாங்கமாய்க் கிழித்தோம்
முகத்திற்கு முன் தர்க்கமாடிய ஐம்பதுபேரை, முழுவதும் தோற்கடித்தோம்
மேசே புஸ்தகமுதல் அறிவிப்பின் வாய்ந்து, முழுவதும் பாட்டி யற்றினோம்
முதன்மைப்பெருஞ் சுவிசேடக்கவிராயனென், மகிமை, மூவுலகு மறியாததோ.

மேற்கண்ட பாடலிலுள்ள சைவ வைணவமாகியப் புராணக்கதைகளையும் ஆரிய மாணிக்கவாசகன் கதையையும் மற்றும் பொய்க் கதைகளையுஞ் தமிழன் வாயிலாய் விளக்கிக்காட்டியுள்ளீ ரவை யனைத்தும் பூரணமாயறிவேனெனினும் சுவிசேடக் கவிராயர் அகஸ்திய மகாமுனிவர் ஞானத்தில் ஐம்பத்தாறு குற்றங் கண்டாராம், சரஸ்வதி எனக் கொண்டாடும் ஒளவை பிராட்டியா ரருளிச்செய்த ஆத்திச்சூடி கொன்றைவேந்தனில் முப்பதைந்து குற்றங்கண்டாராம். திருவள்ளுவர் குறளிற் காமப்பால் செய்ததொரு குற்றமாம் என்கிறார். காமப்பால் என்பதின் பொருளென்னை? காமப்பாலால் மானிடருக்கு விளையுந் தீங்கென்னை என்பதையும் ஒளவையாரைக் கிழவி எனப் புகலுகிறார். ஒளவை என்பது கிழவியா அல்லது ஒரு மாதுக்குரிய பெயரா? கவிராயன் மகிமை மூவுலகுந் தெரியுமாம். மூவுல கென்பதென்னை என்பதையும் விளக்கிவிடவேணுமாயக் கோறுகிறேன்.

டாம்பட்ளர், கே.ஜி.எஃப் ஆஸ்பிட்டல், சாம்பியன் ரீப்ஸ்.

விடை : அன்பரே! தாம் வினாவிய சங்கையை முகமன்னின்றி விளக்குவதிற் பயனில்லை. அகஸ்தியர் ஞானமென்பதில் ஞானசௌமிய சாகரமா அன்றேல் தற்கால போலி மதஸ்தர்கள் அங்குஷ்ட பரிமாண அகஸ்தியராலெழுதிய ஞானமென வரைந்துவைத்துள்ளார்கள், அதுவா என்பதும் விளங்கவில்லை. நாயனார் திரிக்குறட் குறையையும், ஒளவையார் ஆத்திச்சுவடி, கொன்றை வேந்தனிலுள்ளக் குறைகளையும் எடுத்துக் கடாவுவதாயின் குறை கூறிய ஆளுமில்லை எடுத்துப் பேசுவதாற் பயனுமில்லை.
ஆயினும் வேதநாயக சாஸ்திரியார் விடுத்த செய்யுளுக்கு அக்காலத்திருந்த மா. கதிர்வேலு கவிராயரென்பவர் ஓர் மறுப்பெழுதி இருக்கின்றார்.