பக்கம்:மாவீரர் மருதுபாண்டியர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

தமிழகத்தின் தென்கோடியில் மட்டுமல்லாமல் இந்தியநாட்டின் தென்பகுதி முழுவதும் நிலவி வந்ததைப் பல ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.

கும்பெனியாரது ஆதிக்கப் பேராசைக்கு இலக்கான மகராஷ்டிரம், கர்னாடகம், வயநாடு, கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிளர்ச்சித் தலைவர்கள், திண்டுக்கல் கோட்டையில் சந்தித்து தங்கள் பகுதிகளில் அன்னிய எதிர்ப்பு கிளர்ச்சிகளை மேலும் எவ்விதம் தீவிரப்படுத்துவது என்பதைப்பற்றி ஆய்வு செய்தனர். இறுதியில் தங்கள் முதல் நடவடிக்கையாக கோயம்புத்துார் நகரில் 3-6-1800ஆம் தேதியன்று ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவது எனத் தீர்மானித்தனர். இந்த ரகசிய கூட்டத்தில் விருபாட்சி கோபால நாயக்கர், கோயம்புத்துர் கெளஸ்கான், மலபார் கேரளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா, மகாராஷ்டிரத்து துந்தியாவாக் ஆகிய முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் பங்கு கொண்டனர்.[1] இந்த இரகசியக்கூட்டம் பற்றிய துப்புகளைப் பின்னர் விசாரித்து அறிந்த கும்பெனியார் இந்தக் கூட்டத்தில் சிவகங்கைப் பிரதானி சின்னமருதுவும் பங்கு கொண்டார் என்ற விபரத்தை அறிந்து ஆச்சரியப்பட்டனர்.

அதுவரை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அவர்களது விசுவாசமான நண்பர் எனக்கருதி, சின்னமருது சேர்வைக் காரரைப் பாராட்டிப் புகழ்ந்து வந்த கும்பெனியாருக்கு, அவர் மீது ஐயம் ஏற்பட்டது. அதனை உடனடியாக வெளிப்படுத்திக் காட்டிக் கொள்ளாமல் ராஜதந்திரத்துடன் அவரது நடவடிக்கை அனைத்தையும் இரகசியமாக கண்காணித்துவர ஏற்பாடு செய்தனர். சிவகங்கைச் சீமையை அடுத்துள்ள இராமநாதபுரம் சீமையில் உள்ள கும்பெனியாரது கைக்கூலிகளான அமில்தார்கள், சிவகங்கைச் சீமையில் இருந்து வரும் ஆட்களது நடமாட்டத்தை நோட்டமிட்டு அப்பொழுதைக்கப்பொழுது அவர்களது எஜமானரான இராமநாதபுரம் கலெக்டருக்கு அறிக்கைகள் அனுப்பி வந்தனர்.

“... ... மயிலப்பன், ஒரு இஸ்லாமியருடனும் நூறு வீரர்கள், இரண்டு குதிரைகளுடனும் இரண்டு வண்டி வெடிமருந்துப் பொதி


  1. 52. Rajayyan Dr. K: Selections from the History of TamilNadu 1978) p. 228.