பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

எஸ். எம். கமால்

நவாப்பும் தடுத்து விட்டனர்.[1] என்றாலும் தமது தாளாத ஆற்றலில் நம்பிக்கை கொண்ட கான்சாகிப் தம்மைப் பொருதிய நவாப்பையும் அவரது துணைவரான வலிமை மிக்க பரங்கியரையும் மதுரை கோட்டை முற்றுகையில் திக்குமுக்காடச் செய்தார். ஓராண்டுக்கு மேலாக அந்த முற்றுகைப்போரில் பல உத்திகளைப் பயன்படுத்தியும், பயன் அளிக்காததினால், இறுதியாக நவாப், துரோகிகளைக்கொண்டு கான்சாகிப்பை பிடித்து 16-10-1764-ல் தூக்கில் போட்டுக் கொன்றார்.[2]

அன்றைய தமிழ்நாட்டில், ஏன், இந்திய துணைக்கண்டத்தில் இந்த இருபெரும் வீரர்களைத் தவிர, அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வேறு யாரும் இலர். அந்த தியாகிகளது நாட்டுப்பற்றுக்கும் போற்றலுக்கும் தமிழ் மறவர் என்றென்றும் தலைதாழ்த்தி மரியாதை செய்ய கடமைப் பட்டுள்ளனர். இந்த நாட்டின் விடுதலைப் போர் என்ற பார காவியத்தின் பல்வேறு பகுப்புகளில், அவர்களது தனித்தன்மை, இலட்சியம், அரசியல் நோக்கு, மக்கள் ஆதரவு, போன்ற பண்புகளை ஒப்பு நோக்கி ஆராயும் பொழுது, ஆண்டிலும் அனுபவத்திலும் மிகவும் இளையவரான இராமனாதபுரம் முத்து ராமலிங்க சேதுபதி மன்னர் இந்த இருபெரும் வீரரையும் பல வகையிலும் விஞ்சி நிற்கின்றார். முதலாவதாக அவர் ஒரு தன்னரசு பரம்பரையில் வந்தவர். அவரது இளம் உள்ளத்தில் அந்நிய ஆதிக்க எதிர்ப்பு மிகப்பெரும் அளவில் வேரோடி நின்றது. அவரது குறுகிய கால வாழ்க்கை நிகழ்ச்சிகளின் சிறப்பு பகுதிகள் அவர் ஒரு சுதந்திர வீரர், விடுதலை வேட்கை கொண்டவர் என்பதை விளம்புகின்றன. இன உணர்வும் மறப்பண்பும் மிகுந்த அவர், கும்பெனியாரது ஒவ்வொரு கட்டளையையும் எதிர்த்து புறக்கணித்ததுடன் அவர்களது ஆதிக்கப் பேராசைக்கு குறுக்கே நின்று வந்தார். இதன் காரணத்தினால் இந்த நாட்


  1. Military Country Correspondence, Vol. X., 13-7-1763 р. 99.
  2. Hill, S.C.. Yousuffkhan, the Rebel Commandant (1914).