பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பல்லவர் வரலாறு



4. களப்பிரர் யாவர்?

களப்பிரர்

சென்ற பகுதியில் பல்லவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர் களவர் என்பவர் என்பது குறிப்பிடப்பட்டதன்றோ? இப் பெயர் கன்னடத்தில் களபரு என்று மாறும்; வடமொழியில் களப்ரா என்று மாறுதல் பெறும். இது தமிழில் களப்பிரர் என உருப்பெறும். இவர்கள் ஒரு கூட்டத்தினர்; அரச பரம்பரையினர் அல்லர். இவர்கள் மூவேந்தரை வென்றவராகப் பாண்டியர்-பல்லவர் பட்டயங்கள் குறிக்கின்றன. தமிழகத்துக்கு வெளியே வேற்றரசர் பட்டயங்களில் இவர்கள் குறிப்பிடப்படாமையின், இவர்கள் தென்னிந்தியாவினரே என்பது தேற்றம். வேள்விக்குடி - சின்னமனூர்ப் பட்டயங்களில் கடுங்கோனுக்கு முன்னும் சங்கத்தில் பாரதம் பாடப்பட்டதற்குப் பின்னும் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது எண்ணிறந்த பேரரசர் ஆண்டு மறைந்தனர் என்பது காணப்படுகிறது. பெரிய புராணத்தில் மூர்த்திநாயனார் காலத்தில் மதுரையில் வடுகக் கருநாடக வேந்தன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி அரசாண்டான் என்பது காணப்படுகிறது. எனவே, வேள்விக்குடிப் பட்டயம் குறிப்பிடும் கலியரசனே பெரிய புராணம் கூறும் வடுகக் கருநாடக வேந்தனாக இருத்தல் வேண்டும்; அஃதாவது அவன் களப்பிர அரசனாக இருத்தல் வேண்டும் என்பது. கடைச்சங்கத்தின் இறுதிக்காலம் கி.பி. 250 எனக் கொள்ளினும், கடுங்கோன் களப்பிரரை விரட்டிப்பாண்டியர் அரசை நிலைநாட்டிய காலம் கி.பி 575[1] எனக் கொள்ளினும், களப்பிரர் பாண்டியநாட்டைஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டு வந்தனர் என்பதை உறுதியாக உரைக்கலாம். எனவே, இக் களப்பிரர் ஏறக்குறைய கி.பி. 250 இல் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர் என்னலாம்.[2]


  1. T.V.S Pandaranar’s “Pandyas,’ pp; 103.
  2. C.V.N. Iyer’s Saivism. In S. India, pp.411-412.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/56&oldid=583583" இலிருந்து மீள்விக்கப்பட்டது