பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

பல்லவர் வரலாறு



குறிக்கப்பட்டுள்ளனர். அங்குப் ‘பரமேசுவரன் நான் போவேன் என்று தொழுது நின்ற இடம்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது. பிறகு இரண்யவர்ம ராசனும் தரணி கொண்ட போசரும் நகரத்தாரும் காடக முத்தராயரும் குறிக்கப்பட்டுள்ளர்; பின்னர் இளம் பல்லவ மல்லன் ‘நந்திவர்மன்’ என்னும் பெயரால் அபிடேகம் செய்யப்பெற்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.[1]

இச் சிற்பங்களை ஒன்று முதல் இறுதிவரை நன்கு கவனிப்போமாயின், பல்லவர் மரபை முதலிலிருந்து நன்கு விளக்கிச் செல்லலைக் காணலாம். இவற்றைப் பதிப்பித்த ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளதைக் கீழே காண்க:- “இரண்டாம் பரமேசுவர வர்மன் இறந்த பிறகு கடிகை யாரும் மூலப்பிரகிருதியாரும் அமைச்சரும் இரண்ய வர்ம மகாராசனைக் கண்டனர்; தமக்கோர் அரசனைத் தர வேண்டினர். உடனே இரண்யவர்மன் தன் மைந்தர் நால்வரையும் அழைத்து, ‘யார் அரசராக விரும்புகிறீர்?’ என்று கேட்டான். முதல் மூவரும் மறுத்தனர். பன்னிரண்டு வயதுடைய பல்லவமல்லன்தான் அரசனாக விழைவதை வணக்கத்தோடு கூறினான். தரணிகொண்ட போசர்[2] தனது இசைவைத் தருமாறு இரண்யவர்மனை வற்புறுத்தினார். பிறகு தந்தையும் தரணிகொண்ட போசரும் தந்த கைப்படைகளையும் தாண்டிக் காஞ்சிக்குவந்தான். அவன் வருதலை அறிந்த பல்லவடி அரையன் பெருஞ்சேனையுடன் எதிர்கொண்டு அவனை யானைமீது அமர்த்திஅழைத்து வந்தான். பல்லவ மல்லனை நகரச் செல்வரும் ‘காடக முத்தரையர்’ முதலிய சிற்றரசரும் பிறரும் வரவேற்று அபிடேகம் செய்தனர்; நந்திவர்மன் என்னும் பெயரை அபிடேகப் பெயராகச் சூட்டினர். விடேல் விடுகு, கத்வாங்கதான், ரிஷபலாஞ்சினன் என்னும் பட்டத்திற்குரிய விருதுப் பெயர்களை வழங்கினர். நந்திவர்மன் அரசன் ஆனான்.[3]


  1. S.I.I. Vol. IV pp. 10-12
  2. மாகாணத்தலைவர்(Governor) Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country. pp.75-77.
  3. Ep. Indica, Vol. XVIII, p.177