பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

பல்லவர் வரலாறு



பல்லவர்-பாண்டியர் போர்

போருக்குக் காரணம்

(1) பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற் கெல்லாம் சிறந்த காரணம் கொங்குநாட்டு உரிமையாகும். கொங்குநாடு ஒருகாலத்திற் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்திற் பல்லவரிடமும் கைமாறிவந்தன. நந்திவர்மன்கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான். அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான். (2) அடுத்த காரணம் சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணமடைந்திருந்தது. இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியர் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.[1]

போர்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம் பழைய காலத்தில் பகைவர் தென்புறக் கோட்டையாக இருந்தது. அதற்கு நந்திபுரம் என்பது பெயர். அங்குப் பெருமாள் கோவில் உண்டு. அதனைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அந் நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்த சமயம் பார்த்துப் பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் சென்று நந்திபுரத்தை முற்றுகை இட்டான். பாவம்! பாண்டியன் படையெடுப்பை எதிர்பாராத நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.

நல்ல காலம்! வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதய சந்திரன் என்னும் படைத்தலைவன், பெருஞ்சேனையுடன் நந்திபுரத்திற்கு விரைந்தான். அவன் ‘வில்வலம்’ என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவன். அவன் விரைந்து சென்று, அல்லிமலர் இதழ் போல் ஒளிர்ந்த தன் வாளால் சித்திரமாயனையும் பிறரையும் கொன்றான்;


  1. Ep. Ind Vol. DK p.205, M.V.K. Rao’s “Ganges of Talakad’ p.58.