பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

163



நோக்கின், அவரால் குறிக்கப்பெற்ற ‘இராசவர்மன்’ இராசசிம்மனே என்பதும், அவர் பல்லவனது அவைப்புலவர் என்பதும் பிறவும் நன்குணரலாம். ‘காவ்யாதர்ஸ்த்தின் ஐந்தாம் பகுதி, காஞ்சியில் உள்ள அரச மாணவனுக்குக் கற்பிக்கவே செய்யப்பட்டது’ என்னும் செவிவழிச் செய்தியையும், ‘அப் பகுதியை நன்கு ஆராயின், தண்டியிடம் படித்த அரசமாணவன் இராசசிம்மனே என்பது தெளிவாகிறது’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறுதலையும், இவற்றுடன் கைலாசநாதர்கோவில் கல்வெட்டுகளில் சிலேடைப் பொருள் கொண்ட கல்வெட்டு ஒன்று இராசசிம்மனைப் பற்றியது என்பதையும் நோக்க - இராசசிம்மன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதை நன்குணரலாம். அத்துடன், இவன் நாகரிகக் கலைகளான இசை நடனம், ஓவியம், சிற்பம் இவற்றிலும் வல்லவனாக இருந்தான் என்பதும் நன்கு புலனாகிறது.

நாடக அறிஞன்

வடமொழியில் ‘பாஷர்’ என்பவர் பல நாடகங்களை விரிவாக வரைந்துள்ளார். பிறகு அவை நடிப்பதற்கேற்ற முறையிற் சுருக்கி வரையப்பட்டன. அவற்றின் இறுதியில், ‘பல்லவன் அவையில் நடித்துகாட்ட இங்ஙனம் தாயாரிக்கப் பெற்றவை’ என்பது கண்டுள்ளது. இப் பல்லவன் இராசசிம்மனாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், இராசசிம்மன் நாடகக் கலையிலும் பண்பட்ட அறிவுடையவன் என்பது புலனாகும்.