பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


விடியலில் எழுந்ததும் எளிய மக்கள், மலர் பூத்து மணக்கும் பொய்கையில் நீராடுவர். வளம் பெற்ற மாந்தர் மண்மிடாவில் பாதிரிப் பூ போன்ற இதழ் தடித்து மணங்கமழும் பூக்களைப் போட்டு அதன் மணம் ஏறிய நீரில் நீராடுவர். பெருஞ்செல்வர், 32 வகை ஒமாலிகை என்னும் மனப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடுவர். இவ்வாறு நீராடலால் மலரின் பயனைக்கொண்டு உடலில் மணம் ஏற்றினர். ஈரம் புலர்த்திய பின்னர் மகளிராயின் கூந்தலில் சில மலர் சூடுவர்: கதுப்பில் கோதை அணிவர். ஆடவர் குஞ்சியில் மலர் செருகுவர். குடுமியில் மலர் சுற்றுவர். காதிற் பூச் சூடுவர். மலர்ந்ததும் மணக்கும் அரும்பால் மாலை கட்டி மார்பிலும் தோளிலும் அணிவர். பூந்தாது என்னும் மலர்ச் சுண்ணத்தை இல்லத்தில் காற் றில் பரவவிட்டு அதில் உலா வந்து தம் உடலில் மலர்ச் சுண்ணம் படியச் செய்வர். (இக்காலத்தில் மணத்தூள்-Powder போட்டுக் கொள்வதாக உள்ளது.) இவை காலை நேரத்தில் மகிழ்ச்சியைத் தருவன. மாலையில் மலர்த் தேனைப் பருகிக் களிப்பர். உடுத்தும் உடைகளிலும் பூத்தொழில் செய்யப்பட்ட வற்றை உடுப்பர். 87 பகலில்அணிந்த பொன்அணிகளை அகற்றிவிட்டு மாலையில் மலரும் மலர்களைக் கண்ணியாகவும் கோதையாகவும் சூடுவர். மாலைகளாகவும் தாராகவும் தோளிலும் மார்பிலும் அணிவர். பூப்பந்தரில் அமர்வர். தேன் புளித்த தேறலை மாந்தித் தினவு பெறுவர். . இரவின் படுக்கையை மலர்ப்படுக்கையாக்குவர். புணர்ச்சியின்போது புதிய தார்களையும் மாலைகளையும் இருவரும் அணிந்து புணர்ந்து பூரிப்பர். காதலன் காதலிக்குப் பூச்சூட்டிப் புன்னகை பூப்பான். தலைவனுக்கு மாலை அணிவித்து அவள் மலர்வாள். இவ்வாறு, மாந்தரில் தனியார் மலர்ப்பயன் கொண்டனர். காதலனுக்கு எழுதும் காதல் முடங்கல்கள் தாமரை இதழிலும் தாழை மடலிலும் எழுதப்பட்டன. _________________ 87 "நாளணி நீக்கி நகைமாலைப் பூவேய்ந்து"-பரி 10:114