பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பல்லவர் வரலாறு



வந்தவன். காஞ்சி அரசனான தந்திவர்மனைத் தாக்கினான். தந்திவர்மன் கோவிந்தனுக்குத் திறை கட்டாதிருந்தனனோ-அல்லது அவற்கு மாறகக் கம்பரசனுடன் சேர்ந்திருந்தனனோ - இரண்டும் இன்றி அவன் வெறுக்கத்தக்க வேறு முறைகளில் நடந்து கொண்டனனோ தெரியவில்லை. தந்திவர்மன் ஏறத்தாழக் கி.பி. 803 இல் தோல்வியுற்றான். தோற்ற தந்திவர்மன் அவனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்தான் போலும்! கோவிந்தன் இங்கு நின்றும் இராமேச்சுரம் வரை சென்று, அங்கு கி.பி. 804 இல் பட்டயம் ஒன்றை (பிரிட்டிஷ் காட்சிச்சாலை பட்டயம் EP.Ind Vol.II.P 126) விடுத்து மீண்டான்.

பல்லவர் - இரட்டர் போர் 3 (கி.பி.808-810)

மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அந்தச் சமயத்தில் கங்கபாடி அரசன். தந்திவர்மன், சேர, சோழ, பாண்டியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவோ அல்லது அவனது நாட்டின்மீது படையெடுக்கவோ சூழ்ச்சி செய்தனர் என்று ‘சஞ்சன்’ பட்டயம் செப்புகிறது. பெருவீரனான கோவிந்தன் கடுஞ்சீற்றம் கொண்டு பெரும் படையுடன் புறப்பட்டான். தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ பாண்டியர் நாடுகளை இராட்டிரகூடவீரர் அளந்து திரிந்தனர். இதனை அறிந்த இலங்கை அரசன் அஞ்சிஅவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான்.290

தந்திவர்மன் இந்தப் போர் முடிவிலும் வழக்கம்போலக் கோவிந்தனுக்கு அடங்கி இருப்பதாக வாக்களித்திருக்கலாம். என்னை? இப் போருக்குப் பின்னரும் தந்திவர்மன் காஞ்சியில் அரசனாக இருந்து பல்லவர் நாட்டை அரசாண்டு வந்தமையால்


289. Altekar’s Rashtrakutas and their Times’ pp.61, 65

290. Ibid pp.68, 69. “Gangas of Talakad, p.64.