பக்கம்:அன்பு மாலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அன்பு மாலை

சத்துவத்தின் தனியுருவை யோக மென்னும்
தனிநிலையின் உச்சியினில் நிற்பான் தன்னை
இத்தரையில் ராமசுரத் குமாராய் நிற்கும்
இவனைநண்ணிக் கண்டவர்கள் இன்னல் தீர்வார்.

188

எந்நாளும் எவ்விடத்தும் இருக்கின் றானை
எள்ளுளெண்ணெய் போலிருப்பான் என்பார் நல்லோர்;
முன்னாளும் பின்னாளும் கடவுள் தன்னை
முயற்சிசெய்து கண்டவர்கள் சிலபேர்; அன்னார்
நன்னாளில் குருவருளால் நலம்பெற் றார்கள்;
நானிலத்தில் ராமசுரத் குமார்பால் சென்றே
இன்னாத நீக்குகின்றார் எவரோ அன்னார்,
இந்நிலத்தில் மெய்ச்சுகத்தை எய்து வாரே.

189

பெண்ணாகி ஆணாகி அலியு மாகிப்
பிறங்குகின்ற குழந்தையாய்க் கிழவன் ஆகி
விண்ணாகி மண்ணாகிக் காற்று மாகி
வியன்நீராய் வெளியாகி நிற்பான் தன்னை
உண்ணாடும் யோகியர்கள் காணும் சோதி
உருவானை அருணைநகர் வீற்றி ருக்கும்
கண்ணாணை ராமசுரத் குமாரைக் கண்டார்
கலியுகத்தில் மெய்யின்பம் காண்டார் தாமே.

190

(வேறு)

ஆசையெனும் வலையறுத்தால் அப்பொழுதே ஞானம்
அடையலாம்; ஆதலினால் அன்பர்காள், இங்கே
மாசுடைய மனமெல்லாம் தூயதென ஆக
வந்தணைவீர் அவாவறுக்கும் வழியினையே காண்பீர்;
தேசுடைய முகமுடையான், கண்ணொளிசேர் செல்வன்;
சீர்ராம சுரத்குமார் இருக்கின்றான்,அருணை
வீசுபுகழ்ப் பெருநகரில்; எல்லோரும் வம்மின்;
வினையறுத்தே சாந்திநிலை கண்டிடலாம் பாரீர்.

191
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/76&oldid=1303486" இலிருந்து மீள்விக்கப்பட்டது