பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அதிகமான் நெடுமான் அஞ்சி

 கொண்டிருந்தான். “இதுவரையிலும் தங்களை நான் காணும் பேறு பெற்றிலேன். இன்று தாங்களே கருணையினால் வலிந்து வந்தீர்கள். அப்படி வந்தும் என் கடமையை உடனே செய்யாமல் இருந்து விட்டேன். இந்தப் பெரும் பிழையை இனி ஒரு நாளும் செய்யமாட்டேன். தங்களைத் தமிழ்நாடே புகழ்ந்து மதித்துப் பாராட்டுகின்றது. இவ்வளவு பெரு மதிப்புடைய அன்னையாராகிய தாங்கள் என்னையும் ஒரு பொருளாகக் கருதி வந்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்!” என்று மனம் குழைந்து கூறினான்.

இருவரும் உரையாடினார்கள். ஔவையாரின் புலமைச் சிறப்பை ஒவ்வொரு சொல்லிலும் உணர்ந்து மகிழ்ந்தான் அதிகமான். அவனுடைய பண்பின் பெருமையைப் பேசப் பேச அறிந்து கொண்டார் ஔவையார். இரண்டு நாட்கள் புலவர் பெருமாட்டியார் அங்கே தங்கினார் ; பிறகு விடைபெற்றுப் புறப்பட்டார். அப்போது அதிகமான் மிக வருந்தினான். “நான் ஆண்டிலும் சரி; அறிவிலும் சரி, மிகவும் சிறியவன்; நீங்களோ இரண்டிலும் பெரியவர்கள். தங்களைப் போன்றவர்கள் எனக்கு வழி காட்டினால் எத்தனையோ மேன்மை உண்டாகும். இனிமேல் தாங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிப் பல பரிசுகளை வழங்கி விடை கொடுத்தனுப்பினான்.