பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மதம் மாறிய மகனுக்கு
கண்ணீர்க் கடிதங்கள்!

காந்தி அடிகளது பெருமை உலகம் எல்லாம் பரவியது! இந்திய மக்கள் போற்றி வணங்கும் அற்புதத் தலைவராக அடிகள் வளர்ந்து வந்ததால். மகாத்மாவை, அவரது பெயர் அருமையை அறியாதார் எவருமில்லை எனலாம்.

காந்தியடிகள் இந்த அளவு வளர்ச்சியுறுவதற்கு அன்னை கஸ்தூரிபாய் தான்தலை சிறந்த காரணம் என்றால், அது ஏதோ சடங்குக்காக எழுதும் வாசகமல்ல; சத்தியத்துக்காக எழுதும் உண்மையாகும்.

இந்த இருவருக்கும் பிறந்த புதல்வர்தான் ஹீராலால் என்பவர். இவர் தனது தந்தையான மகாத்மா காந்தியடிகளுக்கு நேர் எதிரான குணங்களை உடையவராக இருந்தார். காந்தியடிகள் ஒழுக்க சீலர் என்றால் ஹீராலால் ஒழுக்கமற்றவர். தந்தை அமைதியானவர், இவர் ஆர்ப்பாட்டமுடைய அராஜகவாதி; காந்தி மதுபான விரோதி; இவர் மதுபானப் பிரியர்; காந்தி அகிம்சாவாதி; இவர் அகிம்சைக்கே பகையானவர்; காந்தி இந்துமதப் பேரறிவளார்; மகன் முகமதிய மதம் மாறியவர். இவ்வாறு எல்லா நிலைகளிலும் அவர் தனது தந்தையான காந்தி பெருமான் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவராக வாழ்ந்தவர்.

முகமதியராக மாறிவிட்ட தனது மகனுக்கு கஸ்தூரி பாய், ஒரு கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடித விபரம் வருமாறு: