பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலம்பறத்தான் இங்கே வந்து சேர்ந்திருக்கணும்னு தோணுது: நம்ப எல்லாருடைய க்ஷேமலாபத்தையும் வழக்கமான பாசத்தோடவும் அன்போடவும் விசாரிச்சார்; உன்னோட நெஞ்சுவலி இப்போ தேவலாம்ன்னு சொன்னடியும், சந்தோஷப்பட்டார்; பாபுவைப் பற்றியும் அக்கறையோடு கேட்டார். ஆனால், பேச்சு நட்டநடுவிலே ‘கட்’ ஆகிப் போச்சு மறுபடி பேசுவார்னு நம்பிக்கையோட எதிர்ப்பார்த்தேன்; மகேஷ் இதுவரையிலும் பேசவே இல்லனி!...”

ரஞ்சனி சிலையாகவே ஆகிவிட மாட்டாள்!

உண்மைதான்.

“ரஞ்...”

“....”

ரஞ்சித் தண்ணீராய் உருகினார்!-மெளனத்துக்குப் பாஷை ஒரு கேடா, என்ன?-அப்படி நினைத்துத்தான் ரஞ்சனி இப்படிப் பேசாமல் இருக்கிறாளா?-இருப்புக் கொள்ளவில்லை; ஏக்கத்தின் இருப்பும் கொள்ளவில்லை. சோதித்த மெளனத்தைச் சோதிக்க அவருக்குத் தெரியும், கருணையும் அன்பும், பாசமும் நேசமும் புன்னகையின் அவதாரம் எடுத்தன: “ரஞ்சனி!” மெளனத்தைத் தூள் பரப்பிக் கூப்பிடலானார் அவர்.

ரஞ்சனி சில்லிட்டுப் போயிருப்பாளோ? சிலிர்த்தெழுந்தவள் புதிய கம்பீரத்துடன் விழிகளை உயர்த்தினாள். அள்ள அள்ளக் குறைந்திடாத பாசத்தோடு, “அத்தான்!” என்றாள். இதழ்கள் பிறந்த மேனியாகப் புன்னகை கூட்டின. சலனத்தின் சுவடே தெரியவில்லையே?

பாங்கருக்குக் கொள்ளை கொண்ட குதூகலம் கொள்ளை கொள்ளையாக வரவு ஆயிற்று.

18